
பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். இவர், தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றிவருகிறார். இவரிடம், தடகள வீராங்கனைகள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர்.
நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், பல சமயங்களில் பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில், நாகராஜன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மே 28ஆம் தேதி நாகராஜனை கைது செய்தனர். அதன்பின், அவரை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜுன் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
நாகராஜனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், 3 நாட்கள் காவலில் எடுத்து விசார்க்க பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.