
பொன்னேரி நகராட்சி மன்ற தலைவரை கண்டித்து கவுன்சிலர் 18 பேர் வெளிநடப்பு செய்தனர். இந்த கூட்டத்தில் 8 உறுப்பினர்களே கலந்து கொண்ட நிலையில் மீதமுள்ள 18 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் எவ்வித தகவலும் வார்டு கவுன்சிலர்களுக்கு நகர்மன்ற தலைவரால் தெரிவிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறியும் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஹிட்லர் போல நகராட்சி நடத்துவதாகவும் இதன் காரணமாக கூட்டத்தை 18 கவுன்சிலர்களும் புறக்கணித்ததாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.மேலும் இதுகுறித்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் நகர்மன்ற செயல்பாடுகளை புறக்கணிக்கப் போவதாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வட கிழக்கு பருவமழையின் போது நடைபெற உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நிவாரண பணிகளில் பொது மக்களுக்குப் பெரிதும் தொய்வு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய சேதங்களை உடனடியாக சரி செய்வதற்கு நகராட்சி எவ்வித நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கேள்வி எழும்பி உள்ளது.