Skip to main content

இனி கர்நாடகாவுக்கு சென்றால்... நள்ளிரவு முதல் அமலாகிறது புதிய விதிமுறை!!

Published on 29/11/2021 | Edited on 30/11/2021

 

gf

 

கரோனா வைரஸ் தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து அதன் பாதிப்பை பல வடிவங்களில் ஏற்படுத்திவருகிறது. இந்தியா முழுக்க பெரும்பாலும் கரோனா தாக்கம் என்பது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கரோனா பரவல் பெருமளவு குறைந்துவிட்டது. தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளதால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட சில நாடுகளில் அதிகமுறை உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது எனவும் நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்கக் கூடிய தன்மை உடையது எனவும் நிபுணர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல மருத்து ஆய்வாளர்கள் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கையும் கொடுத்துள்ளார்கள். 

 

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டு, அவரவர் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த  வேண்டும் என மாநில சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் சாலை போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.  இதற்காக பண்ணாரி, ஆசனூர், காரபள்ளம் ஆகிய 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலும் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் பகுதியிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. 

 

இந்நிலையில், 29ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஒமிக்ரான் வைரஸ் பரவிவருவதால் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாகவும், ஆகவே 29ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைத்து வாகன ஓட்டிகள், ஊழியர்கள், அதில் பயணிப்பவர்கள் என அனைவரும் இறுதியாக 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவர்களிடம் இருந்தால் மட்டுமே கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல் அனுமதி இல்லை என அதிரடியாக  உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு 29 நள்ளிரவு முதல் அமலுக்குவருகிறது. இனி கர்நாடகாவுக்குச் சென்றால் கரோனா நெகடிவ் சான்றிதழோடுதான் செல்ல முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐந்து மாநிலங்களில் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

narendra modi

 

இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

 

அதேபோல் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர், நேற்று முன்தினம் இந்தத் தேர்தல் செய்திகளை அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

 

இதனையடுத்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாமல் இருப்பதற்கான  நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

 

 

Next Story

அண்ணாமலையாரைத் தரிசனம் செய்ய தடுப்பூசி சான்று கட்டாயம்!

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

Vaccine proof is mandatory to see Annamalaiyar!

 

திருவண்ணாமலை மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இன்று (09/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு நாளை (10/01/2022) முதல் கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். சுவாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

 

தற்போது, கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.