ஈரோட்டில் இன்று கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இளம் வாலிபர் உயிரிழந்தார், அவருக்கு வயது 33. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் இறந்த இளைஞர் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மூலப்பாளையம் காந்தி நகர் என்ற பகுதியில் வசித்த அந்த இளைஞருக்கு திருமணமானமாகி விட்டது. இந்த நிலையில் சென்ற 5 ம் தேதி இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியான பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 9 ந் தேதி அதிகாலை உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த இந்த நபர் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் மாலில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஐந்து வயது குழந்தையும் இருக்கிறார்கள்.
இவரது உடலை அடக்கம் செய்ய வெண்டிபாளையம் என்ற பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரின் உறவினர்களோடு எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 9 ந் தேதி மதியம் எடுத்து வந்தனர். முழு கவச உடையுடன், கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, கல்லறை தோட்டத்திற்கு திரண்டு வந்தனர். வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு தன்னார்வலர்கள் மீது கல்வீசி தாக்குவதற்கும் முயன்றனர். உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஆம்புலன்ஸில் வந்தவர்கள் தவித்து வந்தனர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் அங்கு ஈடுபட்டனர். இந்த தகவல் மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்றதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்புரத்தினம், மணிகண்டன், செல்வம் மற்றும் போலீசார் அங்கு வந்து மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மக்களோ தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அந்த இடைப்பட்ட நேரத்தில் கரோனாவால் உயிரிழந்தவரின் அந்த உடலை அவரின் உறவினர்கள், தன்னார்வலர்களால் அதிரடியாக அடக்கம் செய்தனர். இறுதியில் போலீசார் மக்களை சமாதனப்படுத்தி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உடல் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்துதான் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால், உங்கள் பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி கொடுத்தனர். வேறு வழியின்றி பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். கரோனாவால் அநியாயமாக இறந்தவர்கள் செத்த பின்பு மண்ணுக்குள் செல்லக்கூட போராட வேண்டியுள்ளது.