Skip to main content

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்தபோது எதிர்த்த 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
 The conditional bail of 8 protestors when the doctor Simon's incident

 

கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்  அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதிகாரிகளை அங்கிருந்து துரத்தியதாகவும் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷெனாய் நகரைச் சேர்ந்த செல்வி, சுதாகர், அந்தோணி ராஜ், மணிமாறன், நிலேஷ்,  பாக்கியம், டில்லிராஜ், சரவணன் ஆகிய 8 பேர் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை, எழும்பூர் ஐந்தாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் விசாரித்தார். விசாரணையின் போது, மனுதாரர்களுக்கு எதிராகப் பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், வழக்கின் புலன் விசாரணை முடியவில்லை எனவும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகவும், சாட்சிகளைக் கலைக்கும் அபாயம் இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைச் சுட்டிக்காட்டி, எட்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளாக உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் என்பதால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பில்லை என நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனை தற்போது சிறை கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,  நீதிமன்றம் திறந்த பின் 10 நாட்களில் ஆஜராகி, தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும்.  அதுபோல, சாட்சிகளைக் கலைக்க கூடாது எனவும்,  நீதிமன்றம் அழைக்கும் போது ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.