Skip to main content

குழந்தை திருமணங்கள்! இரண்டு தாய்மாமன்கள் மீது போக்சோ!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Child marriages two people under pocso act

 

சேலம் அருகே, 18 வயது நிறைவடையாத சிறுமிகளைத் திருணம் செய்துகொண்டு தாயாக்கிய அவர்களின் தாய் மாமன்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கர்ப்பமான நிலையில் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு நவ. 18ஆம் தேதி சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி கர்ப்பமுற்று இருந்ததால், ஓமலூர் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட காவலர்கள் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் அந்தச் சிறுமி, ''சூரப்பள்ளியில் வசிக்கும் என் தாய் மாமன் மூர்த்தி என்பவர் என்னிடம் நெருங்கிப் பழகினார். கடந்த ஜூலை மாதம் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டோம். அதன்பின்னர் ஒன்றாக குடும்பம் நடத்தியதில் கர்ப்பம் அடைந்தேன்'' என்று கூறியுள்ளார். 

 

எனினும், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியைத் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றம் என்பதால், அந்தச் சிறுமியின் கணவர் மூர்த்தி மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோவின் கீழும் வழக்குப் பதிவுசெய்து, அவரை தேடிவருகின்றனர். 

 

மற்றொரு சம்பவம்: 

 

ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளி, பனங்காட்டூரைச் சேர்ந்த 17 வயதான பிளஸ் டூ மாணவி ஒருவர், நிறைமாத கர்ப்பிணியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவரும் 18 வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த ஓமலூர் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், இந்தச் சிறுமியின் கணவரான கமலக்கண்ணன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்தப் புகாரில் சிக்கியுள்ள கமலக்கண்ணன், அவருடைய மனைவிக்கு தாய்மாமன் உறவுமுறை ஆகிறது. இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பிறகு சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. தலைமறைவாகிவிட்ட கமலக்கண்ணனையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

ஓமலூர், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக குழந்தைத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதேபோல்  குழந்தைகளுக்கு எதிரான குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கணிசமாக அதிரித்துள்ளன. இதுகுறித்து அரசும், தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களிடமும், பள்ளிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.