திருச்சி மாவட்டம், தா. பேட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. தா.பேட்டை பாவடி திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், கட்சிப் பேச்சாளர் குடந்தை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் தமிழக அரசின் சாதனைகள் குறித்து பேசினர்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சுற்று சூழல் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் நேரு பேசும்போது, “தமிழக அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மையான அரசாக உள்ளது. பேரறிவாளன் விடுதலையின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய தொழிற்சாலைகள், மக்களுக்கான திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்தும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. தா.பேட்டை ஒன்றியம் மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீரேற்று பாசன திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிதிநிலை பற்றாக்குறை காரணமாக பணிகளை உடனடியாக செயல்படுத்த இயலவில்லை. விரைவில் செய்து தரப்படும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய தார் சாலைகள், மின் மயானங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் என பல்வேறு கட்டமைப்பு வசதிகளை எனது துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கான முதல்வராக மக்கள் விரும்பும் முதல்வராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளார்” என்று பேசினார்.