2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காகத் தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காகத் தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
விருதாளர்களுக்கு ரூ.10 இலட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், கலைஞர் சிலை ஆகியவை வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் வீ.எஸ்.ராஜம், உல்ரிக் நிக்லாஸ் ஆகிய இருவர் தவிர மற்றவர்களுக்கு நேரடியாக விருது வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் பொன்.கோதண்டராமன், இ.சுந்தரமூர்த்தி, ப.மருதநாயம், கு.மோகனராசு, மறைமலை இலக்குவனார், கா.ராஜன், சிவமணி, கவிஞர் தமிழன்பன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற புரட்சிக் கவிஞர் பாராதிதாசனின் கவிதை வரிகளை நெஞ்சில் ஏந்தி இந்த விழாவின் மேடையில் நின்றுகொண்டிருக்கிறேன். தமிழுக்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்பது தமிழ் அறிஞர்களின் நூற்றாண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றியவர் நமது கலைஞர். அத்தகைய கலைஞர் பெயரில் அமைந்துள்ள இந்த விருதை, அதுவும் குறிப்பாக பேரறிஞர் அண்ணா பெயரில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் இந்த விழாவை நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்து தமிழுக்குத் தொண்டாற்றிய இரண்டு பெருமக்களின் நினைவை ஏந்தி இந்த விழா மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். தமிழ் தொன்மையான மொழி என்பதை தமிழர்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. உலகம் முழுக்க உள்ள மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் இதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது. நிலம், மண், பண்பாடு, மக்களுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கிறது நம் தமிழ் மொழி. மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்பு சாலை செம்மொழி சாலை என் இனி அழைக்கப்படும்” என்று பேசினார்.