தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னையைச் சிங்காரச் சென்னையாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவடைந்தது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சுற்றுச்சூழல், கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இத்திட்டத்தின் நோக்கம் நகரத்தை மறு வடிவமைத்து, வாழும் தரம் மற்றும் நீடித்த நிலைப்புத் தன்மையை மேம்படுத்தி உலகின் சிறந்த நகரங்களுக்கு இணையாக மாற்றுவதே ஆகும்.
அந்த வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26/05/2022) சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் “சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 86 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை புல் கால்பந்து மைதானம், ரூபாய் 30 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர், ரூபாய் 7 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை, ரூபாய் 24 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடம் மற்றும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி மேற்கொள்ளுதல் மொத்தம் ரூபாய் 2 கோடியே என 83 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., துணை ஆணையர் சினேகா, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.