Skip to main content

சுவாமி சகஜானந்தா மணிமண்டபத்தை புறக்கணித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
edapadi

 

 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டம் திருக்கடையூர் நடைபெறும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரின் மகன் திருமணத்திற்கு செல்வதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக புதன்கிழமை மாலை சென்றார்.  இவரை கடலூரில் அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்பு செழியன் ஆகியோர் வரவேற்று பூங்கொத்து அளித்தனர். இதனை தொடர்ந்து சிதம்பரம் வண்டி கேட்டு பகுதியில் கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்கா, கட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித்துறை  விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளது. மழை நீரை சேமிக்க குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 

 

கேரளாவில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் அதுபோன்ற நிலை ஏற்படாது, அதிக மழை பெய்யும் போது வெள்ளம் ஏற்படுவது இயற்கை., தமிழகத்தில் அதை சமாளிக்க அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான ஆறு, ஏரி குளங்கள், தூர் வாரப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 318 கோடி மதிப்பீட்டில் 1500 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதனால் தண்ணீரை அதிக அளவில் சேமித்துவைக்கப்படுகிறது. கடைமடைவரை தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.  பல ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக விவசாயிகளுக்கான எந்த பிரச்சினையும் சரிசெய்யவில்லை.  உச்ச நீதிமன்றம் மூலம் அதிமுக அரசு விவசாயிகளின் உரிமைகளை மீட்டு தந்துள்ளது என்றும் கூறினார்.

 

 

 

முன்னதாக தமிழக முதலமைச்சர் தங்கும் பொதுப்பணித்துறை விடுதிக்கு 100 மீட்டர் தூரத்தில் அரசு பெண்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது முன்னறிவிப்பின்றி விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல் சிதம்பரம்- சீர்காழி சாலையில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார் என்று அரசு சார்பில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏ முருகுமாறன் ஆகியோர் மணிமண்டப ஒருங்கிணைப்பு குழு மற்றும் நந்தனார் கல்விக்கழக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து மணிமண்டபத்தில் முதல்வரை வரவேற்க சால்வை மற்றும் மாலைகளுடன் மணிமண்டப ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். ஆனால் முதல்வரோ மணிமண்டப வழியாக சென்றும் மணிமண்டபத்திற்கு வரவில்லை. இதனால் மணிமண்டபத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் முதல்வர் மீது விரக்தி அடைந்து அதே இடத்தில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தனர். பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் உள்ளிட்டவர்கள் சமாதனம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.