அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.இந்தநிலையில், அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் கட்சி நிர்வாகி ஒருவர் காயமடைந்தார்.இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனைத்தொடர்ந்து பதற்றத்துடன் வெளியேறிய செல்லுராஜுவிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டினர். 'வேண்டாம் வேண்டாம்...' என கும்பிட்டுக்கொண்டே வந்த செல்லூர் ராஜு ''தலைவர்கள் சொல்லுவார்கள்'' என்றார். அவரிடம் உங்கள் ஆதரவு யாருக்கு, தலைமைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள், உங்களது கோரிக்கை என்ன, ஒற்றைத் தலைமை விவகாரம் தேவை என நினைக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் அடுக்க சிரித்துக்கொண்டே ''போயிட்டுவாங்க'' என கையெடுத்து கும்பிட்டார் செல்லூர் ராஜு.
அப்பொழுது மீண்டும் ஒரு செய்தியாளர் உங்கள் ஆதரவு யாருக்கு என கேட்க, ''எதுன்னாலும் நான் சொல்லமாட்டேன். ஒண்ணுமேயில்லை நீங்க கிளம்புங்க...'' என கூறிய செல்லூர் ராஜு செய்தியாளர் ஒருவரை பார்த்து '' வேணாண்டா கண்ணா வேணாண்டா கண்ணா'' என கூறி கிள்ளி முத்தமிட்டார்.
இதேபோல் கடந்த முறை செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமாரிடம் ஒன்றைத் தலைமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ''உங்க மீசை நல்லா இருக்கு தம்பி.. உங்க மீசைக்கு நான் ரசிகன்'' என செய்தியாளர் ஒருவரை நோக்கி அவர் பேசி திசை திருப்பியது குறிப்பிடத்தக்கது.