





இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். புகழ்பெற்ற நடிகை டி.பி. முத்துலட்சுமியின் மகனான இவர்., படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.
விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். கடந்த 1988 ஆம் ஆண்டு விசு மற்றும் கே.ஆர். விஜயா நடிப்பில் வெளியான ‘வீடு மனைவி மக்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், தாயா தாரமா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், சீனா தானா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்கள் முன்பு உடல்நலக் குறைவாக இருந்த டி.பி. கஜேந்திரனை தமிழக முதல்வரும் டி.பி.கஜேந்திரனின் கல்லூரி தோழருமான முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததும் குறிப்பிடத்தக்கது
15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய டி.பி.கஜேந்திரன் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தவர். இந்நிலையில் இவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.