Skip to main content

வயர்லெஸ்சில் கேட்ட கார் நம்பர்... நேரில் பார்த்ததும் விடாப்பிடியாக விரட்டிய காவலர் - குவியும் பாராட்டுகள்!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

The car number heard on the wireless ... The policeman who stubbornly chased after seeing it in person

 

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணி என்றாலும், டி.எஸ்.பி. செங்கமலகண்ணனின் கார் ஓட்டுநராக உள்ளார். புதன்கிழமை மணிக்கூண்டு பகுதியில் ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கச் சென்றபோது, அந்த வழியாக கடைவீதியில் சென்ற ஒரு காரைப் பார்த்ததும் இமைப்பொழுதில் அந்தக் கார் நம்பர், அடையாளங்களை சில நாட்களுக்கு முன்பு காவல்துறை வயர்லெஸ் மூலம் கேட்டது அவர் நினைவுக்கு வந்துள்ளது. உடனே அந்தக் காரை நிறுத்த கைகளால் சைகை காட்ட, கார் நிறுத்தாமல் சென்றதால் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றபோது கடைவீதியில் வேகமாக காரை ஓட்ட முடியாத நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடினார்கள்.

 

தனது மோட்டார் சைக்கிளையும் நிறுத்திவிட்டு ஓடியவர்களை விரட்டிச் சென்ற முதல்நிலைக் காவலர் பிரசாத், ஒருவனை எட்டிப் பிடிக்க முயன்று கீழே விழுந்து கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் கசிவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விரட்டிச் செல்ல, அப்பகுதியில் நின்ற இளைஞர்களும் உதவிக்கு வர, தப்பி ஓடிய ஒருவனைப் பிடித்து அவன் நிறுத்திய காரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து பார்த்தபோது காரில் ஒரு அரிவாள், செல்ஃபோன்கள் ஆகியவை சிக்கின. அந்தக் கார், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையத்தில் வாடகைக்கு எடுத்து ஓட்டுநரைக் கீழே தள்ளிவிட்டு திருடிக்கொண்டு வந்தது என்று போலீசார் வயர்லெஸ் மூலம் சொன்ன கார்தான் என்பதும் அந்தக் காரை மதுரையைச் சேர்ந்த வேலுப்பாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவர் திருடி வந்ததும், வேலுப்பாண்டிதான் சிக்கியுள்ளான் என்பதும் தெரிய வந்தது.

 

The car number heard on the wireless ... The policeman who stubbornly chased after seeing it in person

 

காவலர் பிரசாத் சினிமா காட்சிகளை மிஞ்சும்படி சாலையில் விழுந்து காயமடைந்து கார் திருடனை விரட்டிப்பிடித்ததை அங்கு கூடிநின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாராட்டினார்கள். அந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி வெளியான நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, பிரசாத்தின் நினைவுத் திறனையும் உயிரைப் பணயம் வைத்து கார் திருடனை விரட்டிப் பிடித்ததையும் பார்த்து உடனே ரூ. 25 ஆயிரம் வெகுமதி அறிவித்ததுடன் ஃபோனில் தொடர்புகொண்டு பாராட்டினார். தொடர்ந்து தஞ்சை எஸ்.பி ரவ்ளிப்பிரியாவும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை வந்த திருச்சி மண்டல் ஐ.ஜி பாலகிருஷ்ணன், பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டியதோடு, “மிகுந்த நினைவுத்திறனோடு நொடிப் பொழுதில் அந்தக் காரை அடையாளம் கண்டு, தனது உயிரை துச்சமாக நினைத்து குற்றவாளியை விரட்டிப் பிடித்து, காயமும் அடைந்திருக்கும் பிரசாத்தை பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது பாராட்டுகிறேன். இதே போல காவலர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவலர் பிரசாத்தை நேரில் அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். மற்றொரு பக்கம் பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இப்படி பல தரப்பிலிருந்தும் காவலருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. உயிரைப் பணயம் வைத்து பிரசாத் பிடித்த வேலுப்பாண்டியை செய்யாறு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.