Skip to main content

மாயமான கார் டிரைவர்! ஏரியில் சடலமாக மீட்பு!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

car driver incident bengaluru lake police investigation

 

சேலம் அருகே மாயமான கார் உரிமையாளரின் சடலம் பெங்களூரு ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரை மர்ம நபர்கள கொலை செய்து, பெங்களூருவுக்கு கடத்திச்சென்று சடலத்தை ஏரிக்குள் வீசியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவருடைய மனைவி வெண்ணிலா. ரமேஷ், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டிவந்தார். அத்துடன், பழைய கார்களை வாங்கி விற்கும் கார் டீலிங் வேலையும் செய்துவந்தார். 

 

அக். 16ஆம் தேதி, கார் விற்பனை தொடர்பாக வெளியே சென்றுவிட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்ஃபோனுக்குத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. நான்கைந்து நாட்களுக்கு மேலாக குடும்பத்தைவிட்டு முன் தகவல்கள் ஏதுமின்றி ரமேஷ் பிரிந்து இருந்ததில்லை. 

 

இதனால் பதற்றமடைந்த அவருடைய மனைவி வெண்ணிலா, தாரமங்கலம் காவல் நிலையத்தில் கணவரைக் காணவில்லை என புகார் அளித்தார். 

 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், காணாமல் போன ரமேஷ் கொல்லப்பட்டதாக அக். 24ஆம் தேதி அவருடைய உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷின் குடும்பத்தினரும், உறவுக்காரர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

 

இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில், ரமேஷ் கொல்லப்பட்டது உறுதியானது. அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடைய மனைவிக்கும், ரமேஷுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதை அந்தப் பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். ஆனால், அவர்களிடையே அந்தரங்க தொடர்பு மேலும் நெருக்கமாகியுள்ளது. 

 

இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர், ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அத்திட்டப்படி, ரமேஷை அவருடைய நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 7 பேர் கொண்ட கும்பலுடன் ஒன்றாக சேர்ந்து ரமேஷ் மது குடித்துள்ளார். 

 

ரமேஷ் உச்சக்கட்ட போதையில் மயங்கிய நிலையில் இருந்தபோது, அவரை அந்தக் கும்பல் காரில் கடத்திச் சென்று, கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளது. பெங்களூருவுக்கு சடலத்தை எடுத்துச்சென்ற கொலையாளிகள், அங்குள்ள ஒரு ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

 

இந்நிலையில், ஏரியில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைக்கப்பெற்ற பெங்களூரு காவல்துறையினர் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர். 

 

ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று (26.10.2021) அல்லது நாளைக்குள் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.