Skip to main content

பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கி பேயோட்டிய 'பிராந்தி சாமியார்' கைது!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 

நாமக்கல் அருகே, பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாட்டையாலும் பிரம்பாலும் கொடூரமாகத் தாக்கி பேயோட்டிய பிராந்தி சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காதப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). கடந்த சில ஆண்டுகளாக, மஞ்சநாய்க்கணூரில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி வந்தார்.

 

உடல்நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மகன், மகள் திருமணத்தடை அகல வேண்டுவோர் என அவரிடம் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டு வந்தனர். குறிப்பாக, பேய் பிடித்ததாகக் கருதப்படும் பெண்களுக்குப் பேய் ஓட்டும் பணிகளையும் செய்து வந்தார். 

 

தனக்குள் கருப்பண்ண சாமி இறங்கியிருப்பதாகவும், தான் ஒரு சிவ பக்தன் என்றும் சொல்லிவந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, முகத்திலும் உடலிலும் திருநீறு, திரிசடை, இடுப்பில் கொத்தாக கட்டப்பட்ட சலங்கைகள், கருப்பு நிறத்தில் அரைக்கால் டிரவுசர் என சாமியார் போல இருந்ததாலும், அவர் கூறிய சில அருள்வாக்குகள் பலித்ததாலும் படித்தவர்கள் கூட அவரிடம் அருள்வாக்கு கேட்டு வந்தனர். 

 

பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களின் உடலில் இருந்து பேயை விரட்டி அடிக்கிறேன் பேர்வழி என்று, எதிரில் வந்து அமரும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முதுகில் கையால் குத்துவதும், சாட்டையால் சரமாரியாக அடிப்பதும், கன்னத்தில் பளீச் பளீச் என அடிப்பதும், குனிய வைத்து காலால் உதைப்பது என கொடூரமான முறைகளைக் கையாண்டு வந்தார். சாட்டை மட்டுமின்றி நீளமான மூங்கில் பிரம்பாலும் பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களைத் தாக்கி வந்துள்ளார். 

 

'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 

தன் களைப்பு தீர, அடிக்கடி பிராந்தி குடித்துக்கொள்கிறார். பிராந்தியை ஒரு டம்ளரில் ஊற்றிக்கொடுப்பதற்காகவே உதவியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். 

 

அவர் பேய் ஓட்டும் காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வேகமாகப் பகிரப்பட்டுவந்தது. அவர் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும், மூடநம்பிக்கை என்றும் விவாதங்களும் கண்டனங்களும் எழுந்தன. 

 

இதையடுத்து, பொம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் சாமியார் மீது புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன், பேயோட்டி அனில்குமாரை வியாழக்கிழமை (மே 6) நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். அப்போது நடந்த விசாரணையில், தற்போது வாட்ஸ்ஆப்களில் பகிரப்பட்டு வரும் பேயோட்டும் சம்பவம், மூன்று மாதத்திற்கு முன்பு நடந்தது என்று அனில்குமார் கூறியுள்ளார். 

 

எனினும், அருள்வாக்கு, பேயோட்டுதல் என்ற பெயரில் பெண்களைக் கொடூரமாக தாக்குவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் பேயோட்டி அனில்குமாரை வெள்ளிக்கிழமை (மே 7) கைது செய்தனர். 

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''சாமியார் அனில்குமார் பேயோட்டியதாக வாட்ஸ்ஆப்களில் வரும் சம்பவத்தில் தொடர்புடைய பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தற்போது, பெண்களைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில்தான் அனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.