Skip to main content

மஞ்சள் பையும் மரக்கன்றுகளும்.. அரசுப் பள்ளி ஆசிரியரின் சைக்கிள் பயணம்!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி  இடைநிலை ஆசிரியர் சரவணன். மாணவர்களிடம் இயற்கை வழி வாழ்வு, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக மஞ்சள் பை உபயோகிக்க வலியுறுத்தியும், மரங்களை நட்டு பராமரிப்பது குறித்தும் அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சைக்கிள் பயணத்தின் போது பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பை கொடுத்து உறுதிமொழி எடுக்கவைத்தும் வருகிறார். 

 

 Bicycle tour of the government school teacher

 

 

இதுபற்றி ஆசிரியர் சீ.சரவணன் கூறும் போது.. 

 

கடந்த ஜூன் 30 ஆம் தேதி  புதுக்கோட்டை மாப்பிள்ளையார் குளம் அருகே கனமழை பெய்தது. அப்பொழுது வரத்துவாரி பாலத்தின் அடியில் உள்ள தண்ணீர் வெளியேறும் குழாயில் கேரிப் பைகள் அடைத்திருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் பாலத்தின் மேல் உள்ள  சாலையில் அதிகளவில் சென்றது.. அப்பொழுது அவ்வழியே வந்த பள்ளிக் குழந்தைகள் அந்த இடத்தை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் கடக்க நான் உதவி செய்தேன். அதன் பிறகு தான் மக்களிடம் கேரிப்பையை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.. வருடந்தோறும் காந்தி ஜெயந்தி அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் மறைந்த நம்மாழ்வாரின் உரைகளை கேட்ட பொழுது அவரின் மீது பற்று ஏற்பட்டது. 

 

 Bicycle tour of the government school teacher

 

அன்றிலிருந்து இயற்கை வாழ்வு குறித்த தேடலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். திருத்துறைப்பூண்டியில் நெல்ஜெயராமன் நடத்தும் நெல் திருவிழாவில் கலந்து கொள்வேன்.. அங்கே அவர் கொடுக்கும் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு வந்து விவசாயியும் ஆசிரியருமாகிய காட்டுப்பட்டி சின்னக்கண்ணுவிடம் கொடுப்பதை கடமையாக செய்துவந்தேன். வீட்டு மாடியிலும் மாடித் தோட்டம் அமைத்து பராமரித்துவருகிறேன். 

 

நான் எப்பொழுதும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதையே தனது வாடிக்கையாக செய்துவருகிறேன். என்னுடைய திருமண நாள் 2014 செப் 4 அன்று வந்திருந்த அனைவருக்கும் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கினேன். 

 

பள்ளியின் முக்கிய விழாக்களின் போதும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன். தற்பொழுது எனக்கு பி.எட் பயின்றமைக்காக ஊக்கத் தொகை கிடைத்தது. அந்த பணத்தில் ஒரு பகுதியை நல்வழியில் செலவிட எண்ணி என் மனதில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்ய எண்ணம் வந்தது. அதன்படி பாரதி பிறந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாங்குடியில் எனது பயணத்தை தொடங்கி மாராயபட்டி, புல்வயல், பெருமாநாடு, பெருஞ்சுனை , சுந்தர்ராஜ்நகர், கோதாண்டராம்புரம், கீழபழுவஞ்சி, மற்றும் பல பள்ளிகளில் இயற்கை வாழ்வு வாழ மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும், மரம் நட்டுப்பராமரிப்பதின் அவசியம் குறித்தும், கேரிப்பையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். 

 

 Bicycle tour of the government school teacher

 

எனது பயணம் இந்த வாரம் நிறைவு பெற்று விடும். அடுத்து ஜனவரிக்குப் பிறகு விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்கள் நாங்களும் உங்களை போல் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என என்னிடம் கூறும்பொழுது என் மனம் மகிழ்வாக இருக்கிறது. நாம் எப்படி நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல மண்ணில் வாழ்ந்தோமோ அதுபோல நம் சந்ததியும் வாழ வேண்டும் என்பதற்காகவே பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன். தற்பொழுது உருவம்பட்டி பள்ளியில் மாணவர்கள் என்னை அன்போடு வரவேற்று அவர்களது உற்சாக செயல்பாடும் என்னை மேலும் இந்த பணிகளை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற உந்துதலைத் தந்துள்ளது என்றவர் கஜா புயலுக்கு கோடிக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டது. அந்த மரங்களை நிமிர்த்த முடிந்த மரங்களை நிமிர்த்துவதுடன் இப்போதே மரக்கன்றுகளை நட்டால் சில ஆண்டுகளில் அழிந்த மரங்களை மீட்க முடியும். ஆல், அரசு போன்ற நிழல் தரும் மரங்கள் சாய்ந்திருந்தால் அந்த மரங்களை காக்க போத்துகளை நட்டால் வேகமாக வளரும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் விண்ணப்பதாரர்களுக்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Important announcement For candidates of secondary teaching posts

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடைசியாக உள்ள சமர்ப்பி பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவர்களின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

திருத்தம் மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். திருத்தம் செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர் தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆசிரியர்கள் போராட்டம்; 136 பேர் கைது

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
136 teachers who went to besiege the education department office were arrested

கடலூரில் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் 136 பேரை போலீஸார் கைது செய்தனர். 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டாததால் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். 

பின்னர் இயக்கத்  தலைவர் கனகராஜன் தலைமையிலும், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிவானந்தம், துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் ஊர்வலமாகச் செல்லத் தயாரானார்கள். அப்போது அங்கு சென்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீஸார் அவர்களை வழி மறித்து 136 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.