Skip to main content

“தன்னாட்சி அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பு”க்கு சமமானது - ஸ்டாலின் 

Published on 16/05/2018 | Edited on 17/05/2018

காவேரி பிரச்சனையில் தற்போது உருவகப்போகவிருக்கும் ''தன்னாட்சியற்ற காவேரி மேலாண்மை வாரியம்'' வெறும் விசை ஒடிந்த அம்பாக இருக்கும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்


“காவிரி வரைவுத்திட்டத்தை ஆறுவார காலத்திற்குள் உருவாக்குங்கள். எவ்வித காலஅவகாசமும் கொடுக்கப்பட மாட்டாது”, என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும், ஆள், அம்பு, சேனை என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள பேரரசை கையிலே வைத்துக்கொண்டு, ஒரு வரைவுத்திட்டத்தை உருவாக்க மூன்று மாத கால தாமதத்தை மத்திய அரசு செயற்கையாக உருவாக்கியிருப்பது தமிழக நலனை அடியோடு புறக்கணிப்பதாக அமைந்துள்ளது. மே 8 ஆம் தேதி “மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது. ஆகவே காவிரி வரைவுத் திட்டத்துடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் 14 ஆம் தேதி ஆஜராக வேண்டும்”, என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு கூறிய பிறகும் கூட, அன்றைய தினம் ஆஜரான நீர்வளத்துறைச் செயலாளர், “இதுதான் காவிரி வரைவுத்திட்டம். இதை அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டுமா அல்லது உச்சநீதிமன்றமே பரிசீலிக்கிறதா”, என்று ஒரு கேள்வியை உச்சநீதிமன்றத்தைப் பார்த்து எழுப்புகிறார் என்றால், மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை அமல்படுத்துவதில் எவ்வளவு தூரம் முரண்டு பிடிக்கிறது என்பது தெரிகிறது.
 

stalin

 

“வாரியமோ, ஆணையமோ எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை”, என்று வரைவுத் திட்டத்தைக் கொடுத்துவிட்டு மத்திய அரசு சொல்கிறது என்றால், இதே மத்திய நீர்வளத்துறைச் செயலாளர், “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே உச்சநீதிமன்றத்  தீர்ப்பில் இல்லை”, என்று முன்பு கூறியது ஏன்? காவிரி நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் “Eminent Engineer" ஒருவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால் வரைவுத்திட்டத்தில் “இஞ்ஜினியர்” அல்லது “அதிகாரி” தலைமை என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? இப்போது தமிழக அரசின் சார்பிலும் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை வலியுறுத்தாமல் திடீரென்று, “ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும்”, என்று கூறியதன் பின்னணி என்ன?

 

“காவிரி மேலாண்மை வாரியம் தன்னாட்சி மிக்க அமைப்பாக இருக்க வேண்டும்”, என்று காவிரி நடுவர்மன்றம் குறிப்பிட்டுள்ளது.ஆனால் ''தன்னாட்சி அமைப்பு'' என்பது  பற்றி ஏன் தமிழக அரசு வாய்திறக்கவில்லை

 

தமிழக அரசின் சார்பில் வரைவுத் திட்டத்தின்படி அமைக்க வேண்டிய வாரியத்திற்கு என்ன அதிகாரம்? அதை வரைவுத்திட்டத்தில் தெளிவு படுத்துங்கள் என்று ஏன் உறுதிபட வாதிடவில்லை? தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி தண்ணீரை எந்த மாதத்தின் ஒதுக்கீட்டில் இருந்து குறைக்கப் போகிறார்கள்? தமிழகத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டிய மாதத்தில் வரும் ஒதுக்கீட்டிலிருந்து, குறைத்து விடாமல் இருக்க இந்த வரைவுத்திட்டத்தில் என்ன பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது? இதுபற்றி எல்லாம் தமிழக அரசு கேள்வி எழுப்பாததற்கு என்ன காரணம்? இன்றைக்கும் உச்சநீதிமன்றம் மீண்டும் தலையிட்டு, சில திருத்தங்களைச் செய்து, காவிரி வரைவுத்திட்டத்தை நாளை மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

 

stalin

 

அந்த வரைவுத் திட்டத்திலாவது காவிரி நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய “தன்னாட்சி அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா”, “தீர்ப்பை நிறைவேற்றும் அதிகாரம் அந்த வாரியத்திற்கு இருக்குமா” என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது. ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கைகோர்த்துச் செயல்படுவதால், தமிழகத்தின் உரிமைகள் தொடர்புடைய மிக முக்கியமான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பு கருத்துக்களைத் தெரிவிப்பதற்குக் கூட அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ, விவசாய சங்கப் பிரதிநிதிகளையோ, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அழைத்துப் பேசாமல், ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாக தன்னிச்சையாகச் செயல்பட்டிருப்பது, கண்ணும் காதும் வைத்தது போல் தமிழகத்தின் காவிரி உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்த்து, அதிகாரமில்லாத ஒரு குழுவை, "காவிரி மேலாண்மை வாரியம்”, என்ற பெயரில் அமைத்து, அந்தப் பெயரைக் கண்டே எல்லோரும் ஏமாந்து போவார்கள் என்ற நப்பாசையில், உடன்படுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

 

அதனால் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், அதிகாரம்மிக்க அதாவது காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பில் உள்ளவாறு தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு நாளை தாக்கல் செய்யும் வரைவுத்திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஏகபோக எண்ணத்துடன் இயங்கும் மத்திய அரசு ஊதும் மகுடிக்கு ஏற்றபடி ஆட்டம்போடும் பெட்டிப் பாம்பு போல் அதிமுக அரசு அடங்கி, முடங்கிக் கிடக்காமல், தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைய உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உறுதியான வாதத்தை உச்ச நீதிமன்றத்திலும் நாளைய தினம் வலிமையாக  எடுத்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தன்னாட்சி அதிகாரம் இல்லாத மேலாண்மை வாரியம் என்பது, உள்ளீடற்ற வெறும் கூடு போன்றதும் விசை ஒடிந்த அம்பைப் போன்றதுமானது. இதை இப்போதாவது உணரவில்லை என்றால், அதுவே பெரும் பிழையாகி, சரித்திரத்தின் சாபத்திலிருந்து தப்ப முடியாது என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.