Skip to main content

கைதிகளுக்கு செல்போன் சப்ளை செய்த உதவி ஜெயிலர்... 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்தது அம்பலம்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Assistant jailer who supplied cell phones to prisoners! 20 thousand rupees bribe collected exposed !!

 

சேலத்தில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்துக்கொண்டு கைதிகளுக்கு செல்போன் சப்ளை செய்ததாக உதவி ஜெயிலர் மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

 

சேலம் மத்தியச் சிறையில் 800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டம் குறித்த புகாரின்பேரில் அவ்வப்போது சிறைக்காவலர்கள் திடீர் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 

 

காவல்துறை கெடுபிடியால் சமீப காலமாக செல்போன் நடமாட்டம் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கைதிகளிடம் தாராளமாக செல்போன் புழக்கம் இருப்பதாகவும், சிறைக்குள் இருந்தவாறே வெளியே உள்ள எதிரிகளைத் தீர்த்துக் கட்ட வியூகம் வகுத்துக் கொடுப்பதாகவும் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து சேலம் மத்திய சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளிலும் சிறைத்துறைக் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். 6வது தொகுதிக்கு உட்பட்ட 15வது அறையில் நடத்திய சோதனையின்போது, டியூப் லைட் பட்டிக்குள் ஒரு செல்போன் ஒளித்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்தச் செல்போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர்.

 

அதேபோல 1வது அறையில், துண்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் சார்ஜர் வயரும் கைப்பற்றப்பட்டது. மேலும் சோப்புக்கட்டியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிம் கார்டையும் கைப்பற்றினர். 

 

விசாரணையில், குண்டர் சட்டத்தில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள விக்கு என்கிற சண்முகம்(23), கார்த்தி(29), விசாரணைக் கைதி ரவி என்கிற ரவிகுமார்(31) ஆகியோர்தான் சிறைக்குள் இருந்தபடியே செல்போனை ரகசியமாக பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. குண்டாஸ் கைதியான கார்த்தியிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை முயற்சி வழக்கில் கைதாகி, கடந்த 8 மாதங்களாகக் கார்த்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

 

இதே சிறையில் உள்ள கோபி என்ற கைதி கேட்டுக் கொண்டதன்பேரில், வெளியில் இருந்து செல்போனை சிறைக்குள் கடத்தி வந்துள்ளார். இதற்காக, உதவி சிறை அதிகாரி ராகவன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, செல்போனை ரகசியமாக சிறைக்குள் கடத்தி வந்துள்ளார். விசாரணை கைதி ரவி, கோபியின் தம்பியிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, உதவிச் சிறை அதிகாரி ராகவனும் கோபியின் தம்பியுடன் பேசியுள்ளார். 

 

இந்தப் பேச்சுவார்த்தை எல்லாம் சுமூகமாக முடிந்த பிறகு, ராகவனிடம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளது கார்த்தி தரப்பு. இதுகுறித்து கார்த்தி, விசாரணையின்போது எழுத்து மூலமாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறை அதிகாரியே உடந்தையாக இருந்த விவகாரம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

இதையடுத்து ஜெயிலர் ராஜமோகன், அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக கைதிகள் விக்கு என்கிற சண்முகம், கார்த்தி, ரவி என்கிற ரவிகுமார் ஆகியோர் மீதும், செல்போன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உதவி சிறை அதிகாரி ராகவன் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். 

 

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.