
மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று போராட்டம் நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கும் அவர்கள் முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000 ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1500லிருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பாமக ஆதரிக்கிறது. இந்தப் போராட்டத்திற்காக சென்னைக்கு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் நிலையங்களில், ஏதோ பயங்கரவாதிகளைப் போலக் கருதி காவல்துறை தடுத்து கைது செய்துள்ளது. சென்னையிலும் கைது வேட்டை தொடர்ந்தது. காவல்துறையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவது அவர்களின் உரிமை. கடவுளின் குழந்தைகளான அவர்களைத் தடுப்பதும், தாக்குவதும் மன்னிக்க முடியாதவை. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும், உணர்வுகளையும் மதித்து அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இரண்டே மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.