Skip to main content

காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து சென்று நிவாரணம் வழங்கிய அப்பாவு! (படங்கள்) 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருப்பவர் அப்பாவு. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். தொடக்கத்தில் அரசியல் கட்சியான த.மா.க. மூலம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, பின்னர் தன் சொந்த செல்வாக்கால் சுயேட்சையாகக் களம் கண்டு இரண்டாம் முறை எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கை அவருக்குச் சாதகமாக இருந்தும் ‘ஜெ’ ஆட்சியின்போது நூலிழையில் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் பொறுமை காத்த அப்பாவு, இம்முறை எம்.எல்.ஏ.வாகி தன்னுடைய 69ஆம் வயதில் சட்டப்பேரவையின் தலைவராகியிருக்கிறார்.

 

ஆசிரியர், எம்.எல்.ஏ. என்ற பொறுப்புகளைக் கொண்டாலும், ராதாபுரம் தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் இவரது விரல் நுனியில். வானம் பார்த்த பூமியான ராதாபுரம் தொகுதி, குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகக்கொண்ட பகுதி. இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனபோது தொகுதி முழுக்க கிராமங்களில் முதன்முதலாக மோட்டார் பம்ப்புடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டியை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு தணித்தவர். அப்பாவு எம்.எல்.ஏ. அறிமுகப்படுத்திய இப்புதிய திட்டம் பின்னர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவதற்குக் காரணமாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட, அடைமழையாய் கொட்டித் தீர்க்கிறது. மேலும், இடைநில்லாமல் மழை பொழியும் கன்னியாகுமரியை ஒட்டியிருப்பதால், அம்மாவட்டத்தின் மழையின் தாக்கம் அருகிலுள்ள ராதாபுரம் தொகுதியையும் பதம் பார்த்திருக்கிறது. இதன் காரணமாக ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல கிராமங்களில் கடும் பாதிப்பு. இதனையறிந்த சபாநாயகர் அப்பாவு தன்னோடு சிலரை அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் போயிருக்கிறார். அது சமயம் கடும் வெள்ளம் காரணமாக கொமந்தான்குளம் கிராமத்திற்குள் செல்லும் தரைப்பாலத்திலும் தைலம்மாள்புரத்தின் வடக்கு தரைப்பாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டதால், அங்கு செல்ல முடியாத நிலை. 

 

அப்போது அங்கு வந்த சபாநாயகர் அப்பாவுவிடம், “வெள்ளமிருப்பதால் வர வேண்டாம். வடிந்த பின் வாருங்கள்” என்று மக்கள் சொல்லியும், சபாநாயகரோ “நான் எப்படியும் வந்து உங்களை நேரில் பார்ப்பேன். அதற்காகத்தான் வந்துள்ளேன்” என்றவர், அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு ஆபத்தான காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து சென்று, அங்குள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

அந்தப் பகுதியில் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட லெட்சுமணன் என்பவருக்கு ரூபாய் 5,000 பணம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார் சபாநாயகர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் வழங்கவும், இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர ஏற்பாடுகளை விரைந்து செய்வதுடன், போர்க்கால அடிப்படையில் அரித்துச் செல்லப்பட்ட கொமந்தான்குளம் சைதம்மாள்புரம் பாலம் புதிதாகக் கட்டப்படும் என்று உறுதியாகச் சொன்னவர், வள்ளியூர் பெரியார் சமத்துவபுரத்தில் ஒழுகும் வீடுகளை ஆய்வுசெய்து உடனடியாகச் சரிசெய்ய உரிய அதிகாரிகளை விரைவுப்படுத்தியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.