Skip to main content

காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து சென்று நிவாரணம் வழங்கிய அப்பாவு! (படங்கள்) 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருப்பவர் அப்பாவு. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். தொடக்கத்தில் அரசியல் கட்சியான த.மா.க. மூலம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, பின்னர் தன் சொந்த செல்வாக்கால் சுயேட்சையாகக் களம் கண்டு இரண்டாம் முறை எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கை அவருக்குச் சாதகமாக இருந்தும் ‘ஜெ’ ஆட்சியின்போது நூலிழையில் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் பொறுமை காத்த அப்பாவு, இம்முறை எம்.எல்.ஏ.வாகி தன்னுடைய 69ஆம் வயதில் சட்டப்பேரவையின் தலைவராகியிருக்கிறார்.

 

ஆசிரியர், எம்.எல்.ஏ. என்ற பொறுப்புகளைக் கொண்டாலும், ராதாபுரம் தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் இவரது விரல் நுனியில். வானம் பார்த்த பூமியான ராதாபுரம் தொகுதி, குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகக்கொண்ட பகுதி. இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனபோது தொகுதி முழுக்க கிராமங்களில் முதன்முதலாக மோட்டார் பம்ப்புடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டியை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு தணித்தவர். அப்பாவு எம்.எல்.ஏ. அறிமுகப்படுத்திய இப்புதிய திட்டம் பின்னர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவதற்குக் காரணமாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட, அடைமழையாய் கொட்டித் தீர்க்கிறது. மேலும், இடைநில்லாமல் மழை பொழியும் கன்னியாகுமரியை ஒட்டியிருப்பதால், அம்மாவட்டத்தின் மழையின் தாக்கம் அருகிலுள்ள ராதாபுரம் தொகுதியையும் பதம் பார்த்திருக்கிறது. இதன் காரணமாக ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல கிராமங்களில் கடும் பாதிப்பு. இதனையறிந்த சபாநாயகர் அப்பாவு தன்னோடு சிலரை அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் போயிருக்கிறார். அது சமயம் கடும் வெள்ளம் காரணமாக கொமந்தான்குளம் கிராமத்திற்குள் செல்லும் தரைப்பாலத்திலும் தைலம்மாள்புரத்தின் வடக்கு தரைப்பாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டதால், அங்கு செல்ல முடியாத நிலை. 

 

அப்போது அங்கு வந்த சபாநாயகர் அப்பாவுவிடம், “வெள்ளமிருப்பதால் வர வேண்டாம். வடிந்த பின் வாருங்கள்” என்று மக்கள் சொல்லியும், சபாநாயகரோ “நான் எப்படியும் வந்து உங்களை நேரில் பார்ப்பேன். அதற்காகத்தான் வந்துள்ளேன்” என்றவர், அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு ஆபத்தான காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து சென்று, அங்குள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

அந்தப் பகுதியில் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட லெட்சுமணன் என்பவருக்கு ரூபாய் 5,000 பணம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார் சபாநாயகர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் வழங்கவும், இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர ஏற்பாடுகளை விரைந்து செய்வதுடன், போர்க்கால அடிப்படையில் அரித்துச் செல்லப்பட்ட கொமந்தான்குளம் சைதம்மாள்புரம் பாலம் புதிதாகக் கட்டப்படும் என்று உறுதியாகச் சொன்னவர், வள்ளியூர் பெரியார் சமத்துவபுரத்தில் ஒழுகும் வீடுகளை ஆய்வுசெய்து உடனடியாகச் சரிசெய்ய உரிய அதிகாரிகளை விரைவுப்படுத்தியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.