
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுள்ளார். இன்று அதிகாலை முதலே அதிமுக தொண்டர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து வானகரம் புறப்பட்டுள்ளார். அதேபோல் கோமாதா பூஜைக்கு பிறகு ஓபிஎஸ் வானகரம் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வானகரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புழல் -தாம்பரம் வெளிவட்ட சாலையிலிருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.