Skip to main content

“நடிகர் பிரித்விராஜை கைது செய்ய வேண்டும்..” முல்லைப் பெரியாறு ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

"Actor Prithviraj should be arrested ..." PR  Pandian at the Mullai Periyar  issue

 

“உச்ச நீதிம்னறத்தை அவமதிக்கும் நோக்கத்தோடு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக, இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் நோக்கத்தோடு கேரள மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை மந்திரி ராஜன் செயல்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு 2018ஆம் ஆண்டில் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளாவுக்குத் திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதி கண்டிக்கத்தக்கது” என தமிழக அணைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர். பாண்டியன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மோடி அரசு 2018இல் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளாவுக்குத் திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதி கண்டிக்கத்தக்கது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க கேரள அரசு மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பை வழங்க மத்திய அரசு மறுப்பதன் மர்மம் என்ன? அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் ஆக்கிரமித்து சொகுசு விடுதிகள் கட்டியுள்ள திரைப்பட நடிகர்கள், கேரள அரசியல்வாதிகள் திட்டமிட்டு, அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கினால் அவர்களது சொகுசு விடுதிகள் மூடிவிடும் என்பதைப் பாதுகாப்பதற்காக அணை பலம் இழந்துள்ளது என்று விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. 

 

வலைதளத்தில் பெரியாறு அணை குறித்து தவறான தகவலைப் பதிவுசெய்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜை கைது செய்ய வேண்டும். பெரியாறு அணை குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்கின்ற இணையதளங்கள் முடக்கப்பட வேண்டும். பெரியாறு அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். 999 ஆண்டுகள் குத்தகை உரிமை உள்ள நமக்குத்தான் அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதி உள்ளது. கேரள அரசிடம் அனுமதி கேட்டது தவறு. ‘ரூல் கர்வ்’ முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கட்டுப்படுத்தாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக கேரளாவில் உள்ள சதிகாரர்களால் உருவாக்கப்பட்டது ‘ரூல் கர்வ்’.  

 

மத்திய நீர்வள ஆணையம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையைப் பலப்படுத்த வேண்டும். பேபி அணையைப் பலப்படுத்த இடையூறாக உள்ள மரங்களைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, விவசாயிகளுடன் இணைந்து முல்லைப் பெரியாறு அணையைக் காக்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தேனி மாவட்டத் தலைவர் செல்வகுமார், கூடலூர் விவசாயிகள் சங்கம் செங்குட்டுவன், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் கொடியரசன், ஜெயபால், 18ஆம் கால்வாய் தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.