Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷை தொடர்ந்து சமூக ஆர்வலர் வளர்மதி கைது!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
valar


சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர்.

சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

 

 

இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு வழிச்சாலைக்காக நிலம் அளந்து முட்டுக்கல் நடும் பணிகளில் அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.

சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்தில், நில எடுப்பு தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் நிலம் அளக்கும் பணிகளில் ஈடுபட்டனர். வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயியும், சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி பொறியாளருமான கலைவாணிக்குச் சொந்தமான விளை நிலத்தில் அதிகாரிகள் நிலத்தை அளந்து முட்டுக்கல் நட்டனர்.
  valarmathi


அப்போது கலைவாணி, ''நேற்று ஓரிடத்தில் அளந்து முட்டுக்கல் நட்டனர். இன்று இன்னும் சில மீட்டர் தூரம் சென்று நடுக்காட்டுக்குள் முட்டுக்கல் நடுகின்றனர். உங்களது அளவீட்டு முறையே குழப்பமாக இருக்கிறது.

குவாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ள இடங்களில் அவர்களுக்கு சாதகமாக நிலங்களை விட்டுவிட்டு, விளை நிலங்களை மட்டும் குறிவைத்து கைப்பற்றுவது ஏன்? எங்களுக்குச் சொந்தமான 14 ஏக்கர் விளை நிலத்தில், இரண்டு ஏக்கர் நிலம் முழுவதுமாக பறிபோகிறது.

இதுகுறித்து மக்களிடம் நேரில் கருத்து கேட்காமலும், அவர்களின் சம்மதம் பெறாமலும் நிலத்தை அளந்தால் எப்படி? இந்த நிலத்தில்தான் என் மாமனார் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் சமாதி உள்ளது. இந்த நிலத்தை எட்டு வழிச்சாலைக்காக விட்டுத்தர முடியாது,'' என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் சிறிது நேரம் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் அவரை சமாதானம் செய்தனர்.

இதற்கிடையே, இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரான சேலம் பள்ளத்தாதனூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி (24), ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்திற்கு வந்தார்.

அவர் அங்குள்ள பொதுமக்களிடையே, ''நிலம் நம்முடைய உரிமை. வீடு நம்முடையது. நாம் உழைத்து, கஞ்சி குடித்து வருகிறோம். இந்த நிலத்தை யாருக்காகவும் விட்டுத்தர முடியாது. அரசாங்கம், அராஜகமாக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

எட்டு வழிச்சாலை நமக்குத் தேவையில்லை. விவசாயத்தைக் காக்க விவசாயிகள் ஓரணியில் திரள வேண்டும். விவசாயிகளுக்காக போராடுபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்வதை ஏற்க முடியாது,'' என்று பேசினார்.

 

 

இவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறையினர் வளர்மதியிடம் சென்று கைது செய்வதாகக் கூறினர். அதற்கு அவர், ''இங்குள்ள மக்கள் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கும் மக்களுக்கு ஆதரவாக வந்து பேசுமாறு அழைத்தனர். அதனால்தான் வந்து பேசினேன். இதற்கே நீங்கள் கைது செய்வதாகக் கூறினால், இந்த நாட்டில் பேசுவதற்குக்கூட யாருக்கும் உரிமை இல்லையா?,'' என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

பெண் போலீசார் வளர்மதியை கைது செய்வதற்காக அவருடைய கைகளைப் பிடித்து இழுத்தனர். அங்குள்ள மக்கள் வளர்மதியை மீட்கும் நோக்கில் அவர்களும் ஒருபுறம் இழுத்தனர். பின்னர், போலீசார் வளர்மதியை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே வளர்மதி, 'போலீசார் அராஜகம் ஒழிக' என்று முழக்கங்களை எழுப்பினார்.

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இப்போது வளர்மதியும் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இது போன்ற கைதுகள் தொடரும் எனத் தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.