சிதம்பரம் அருகே சக்கங்குடி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கிழக்கு தெருவில் வசிக்கும் ராஜீவ் -சிவரஞ்சினி தம்பதியினருக்கு கடந்த 11 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் சிவரஞ்சனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (17.02.2021) இரவு 11 மணிக்கு அவர்களது வீட்டில் குடிபோதையில் இருந்த கணவனுக்கும்மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது குழந்தைக்கு மனைவி சிவரஞ்சனி பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கணவர், “குழந்தையைக் கொடு, நான் பார்த்துக்கொள்கிறேன்” என குழந்தையை வாங்கி மின்விளக்கை அணைத்து, குழந்தையின் கழுத்தை அழுத்தி தரையில் தூக்கி அடித்துள்ளார். திடீர் சத்தத்தைக் கேட்டு உடனே மின்விளக்கை போட்ட மனைவிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. குழந்தையின் மூக்கிலும் வாய்லும் ரத்தம் கசிந்துள்ளது. குழந்தைக்குப் பேச்சு மூச்சில்லாமல் இருந்ததைக் கண்டு தாய் தலையில் அடித்துக்கொண்டு அலறித் துடித்தார். இதனைக் கேட்டஅக்கம்பக்கத்தினர், ஓடிவந்து குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிறந்து 8 நாளே ஆனகுழந்தையை, பெற்ற தந்தையே குடிபோதையில் தரையில் தூக்கி அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட கணவர் ராஜீவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.