Skip to main content

“தமிழகம் முழுவதும்  500 கலைஞர் உணவகம் திறக்கப்படும்” - டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி  

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"500 Kalaignar restaurants will be opened across Tamil Nadu" - Minister Chakrabani

 

தமிழ்நாட்டில் விரைவில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையலறை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (25.11.2021) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். 

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குடிமக்கள் பாதிக்கப்படும் நிலையைப் போக்கும்விதமாக இத்திட்டம் அமைந்தது. தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் இருந்துவருகிறது. இதில் மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக கடந்த 2007ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு சிறப்பு வினியோகத் திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

அதன் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், 2 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூபாய் 978 கோடி செலவிலும், அதேபோன்று தலா 4,000 ரொக்கத் தொகையும் கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி மாதம் 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திவருகின்றன. இதில் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த உணவகத்தில் பயனடைகின்றனர் மற்றும் இதர பேரிடர் காலத்தில் இந்த உணவகங்களில் கட்டணங்கள் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது.

 

இது போல், வருங்காலங்களில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உணவகத்தை நடத்த சராசரியாக மாதம் 3.5 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும் விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013இல் 100 விழுக்காடு நிதியுதவி வழங்கப்பட வேண்டும். புதிய உணவகங்கள் திறக்கப்பட்டாலும் தற்போது உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். 

 

நெல் கொள்முதல் தீர்ப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சர், 19% ஈர்ப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். அதேபோல் மற்றொரு கோரிக்கையாக, தமிழகத்தில் அரைக்கப்படும் பச்சரிசியில் ஒரு லட்சம் டன்னை அருகில் உள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஒரு லட்சம் டன் புழுங்கலரிசியை வழங்கிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவைப் பட்டினி மற்றும் சத்துக்குறைவு இல்லாத நாடாக மாற்றுவதில் தமிழகமும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் என்றென்றும் துணை நிற்பார்கள். இந்த ஒன்றிய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் இவை அனைத்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.