Skip to main content

16 வயது சிறுமியை திருமணம் செய்த 28 வயது இளைஞர் - தக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

A 28-year-old man who married a 16-year-old girl

 

திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தாலுகா தேனீர்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் சூரிய மூர்த்தி(28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பால் வியாபாரம் செய்ய வந்தவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி சந்தித்து அவரை தன் வலையில் விழ வைத்துள்ளார். சூரிய மூர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவரை  கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் தாயார் தன் மகள் கடத்தப்பட்டுள்ளதாக காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி பகுதியில் சூரிய மூர்த்தி வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் சிறுமியையும், அவரைக் கடத்திச் சென்று சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சூரிய மூர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் சூரிய மூர்த்தி ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தவர்.

 

அப்படிப்பட்டவர் 16 வயது சிறுமியை ஏமாற்றிக் கடத்திச் சென்றது குறித்து வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சூரியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் சூரியமூர்த்தி சிறை காவலில் வைக்குமாறும் சிறுமியை அவரது தாயாருடன் தங்கியிருப்பதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. சூரியமூர்த்தி ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றவர். மேலும் மூன்றாவதாக ஒரு சிறுமியைத் திருமணம் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாகச் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.