Skip to main content

பட்டா வழங்க 10 ஆயிரம் லஞ்சம்! - கையும் களவுமாக சிக்கிய சர்வேயர் கைது!

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
soundrarajan


சேலம் அருகே, தனிப்பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செயல்பட்டு வரும் தாசில்தார் அலுவலகத்தில், நில அளவை பிரிவு செயல்பட்டு வருகிறது. வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டு வீட்டுமனைகளை அளந்து, தனித்தனி பட்டாவாக வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தார்.

அந்த அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வரும் சவுந்திரராஜன், அவருடைய மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக நிலத்தை அளந்து பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திராணி, அவ்வளவு தொகை என்னால் தர இயலாது என்று மறுத்துள்ளார். பிறகு, பத்தாயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார்.

என்றாலும், லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க விருப்பம் இல்லாத இந்திராணி, இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரிடம், ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அந்தத் தொகையை சர்வேயர் சவுந்திரராஜனிடம் கொடுக்கும்படி யோசனை கூறினர்.

அதன்படி, பணம் ரெடியாகி விட்டதாகவும், எப்போது அலுவலகத்துக்கு வந்து தரட்டும் என்றும் சவுந்திரராஜனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், அலுவலகத்திற்கு வந்து கொடுத்தால் மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் என்பதால், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பூக்கடையைக் குறிப்பிட்டு அந்த இடத்திற்கு வருமாறு இந்திராணியை அழைத்தார்.

அதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் இந்திராணி அந்த பூக்கடைக்குச் சென்று காத்திருந்தார். லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரும் அங்குள்ள கடைகளில் பொருள்களை வாங்குவதுபோல் மறைந்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த சவுந்திரராஜனிடம் இந்திராணி பணத்தைக் கொடுத்தார். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சவுந்திரராஜனை வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச்சென்று இதுவரை அவர் எத்தனை பேருக்கு நில அளவைப் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்? அதில் யார் யாரிடம் பணம் பெற்றார்? இதில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், வாழப்பாடி தாசில்தார் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.

தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை  தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம்  விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார். 

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எஸ்.டி, எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு... லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

Published on 03/12/2021 | Edited on 04/12/2021

 

bribe

 

பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்திருப்பதாக பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் பத்து விதமான முறைகேடுகள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.