Skip to main content

பொய் பேசும் அரசியல்வாதிக்கான நோபல் பரிசு! எடப்பாடி பழனிசாமிக்கா? மு.க.ஸ்டாலினுக்கா?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரச்சாரம் செய்தபோது “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பொய்” என்று குறிப்பிட்டு மக்களிடம் அளித்த விளக்கம் இது.   

 

palanisami

 

“அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிப்பதற்காக ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பு அலுவலராக (Nodal Officer) தமிழக அரசால் மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் ஏ.கே.போஸ் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏ,பி படிவங்களில் மருத்துவர் பாலாஜி முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன், நீதிமன்றத்தில் ஏ,பி படிவங்களில் ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பில் ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நிர்வாகத்தின் மூலமாகவோ, அல்லது சிகிச்சை அளித்த மருத்துவர் மூலமாகவோ அதைப்  பெற்றிருக்கவேண்டும்’ என்ற கருத்தைத்தான் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதை இட்டுக்கட்டி, பொய் பரப்பி, கண், காது, மூக்கெல்லாம் வைத்து எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசி, மக்களிடம் குழப்பத்தை விளைவிப்பதற்காக, அயோக்கியத்தனமான ஒரு வார்த்தையை பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தீர்ப்பில் இப்படி சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படி திரித்துப் பேசுகிறார்? ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னால், அதை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்றார்.  

 

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் திரித்து மு.க.ஸ்டாலின் பொய் பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைதானா? என்ற கேள்விக்கு விடை தேடினோம்.

 

jayalalitha

 

டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நீதியரசர் வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் “ஆளுநரோ, மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ பார்க்கமுடியாத ஜெயலலிதாவை அரசு மருத்துவர் பாலாஜி சென்று பார்த்து கைரேகை வாங்கினார் என்பது நிரூபிக்கப்படவில்லை. டாக்டர் பாலாஜி உள்ளே போகும்போது, ஏ மற்றும் பி படிவங்களில் ஏற்கனவே கைரேகை வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்ற படிவங்கள் என்ன ஆனது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். ஆகவே, ஜெயலலிதா சுய நினைவோடு, யோசிக்கும் திறனோடு, நல்ல மனநிலையில்தான் இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு டிரக்யாஸ்டமி எனப்படும் தொண்டைக்குழாய் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது தெளிவாகிறது. எனவே, ஏ மற்றும் பி படிவங்களில் ஜெயலலிதாவுடைய கைரேகை மிகவும் சந்தேகத்துக்குள்ளானதாக இருப்பதால், அந்தப் படிவத்தை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். வேட்புமனுவில் கையெழுத்துதான் பெறப்பட வேண்டும் என்று சட்டம் கூறும்போது, அதில் கைரேகை இடலாமென்று தேர்தல் ஆணையம் சட்டத்தைத் திருத்தி கடிதம் மூலமாக ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, மிகுந்த குறைபாடுடைய இந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதனால், ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது” என்று தீர்ப்பளித்துள்ளார். 
 

மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி  தெரிவித்த கருத்தையும், ஜெயலலிதா கைரேகை வழக்கில் சென்னை  உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், இக்கட்டுரை வாயிலாக அறிந்ததும் ‘பொய் பேசுவதற்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா?’ என்பது தானாகத் தெரிந்துவிடும். 
 

-ராம்கி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.