Skip to main content

திமுக மூத்த தலைவர்களை மொய்க்கும் எம்.எல்.ஏக்கள்

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Who all will be get chance DMK Ministry


நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே தேர்தல் களம் அனல் பறக்கத் துவங்கியது. அதேபோல், இரு கட்சியினரும் தங்களது பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுமா என பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். குறிப்பாக, திமுகவில் இந்த ஆவல் அதிகமாகவே இருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வேட்பாளர்கள் பட்டியலை வாசிக்கும் அந்த நிமிடம்வரை பல கருத்துகள் திமுக தொண்டர்களிடையே பரவியது. 

 

திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்த ஐபேக் டீம் ஒரு பட்டியலை தயார் செய்து ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது. அதன்படிதான் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனும் பேச்சுக்களும் வலம் வந்துகொண்டிருந்தன. அதேபோல், திமுகவினர் பலர் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடம், தங்களது பெயரை சிபாரிசு செய்யும்படியும் கேட்டு வந்தனர். “வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் மிக ரகசியமாக வைத்துள்ளார். அது வெளியாகும்போதுதான் அனைவருக்கும் யார் யாரின் பெயர்கள் இருக்கின்றன என்பதே தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்” என தங்களை கேட்டு வந்த கட்சியினரிடம் திமுக மூத்தத் தலைவர்கள் தெரிவித்தனர். 

 

திமுகவின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அவரே ஒவ்வொரு வேட்பாளர்கள் பெயரையும் படித்தார். அதில் பெரும்பாலும் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் பெயர்கள் அடங்கியிருந்தன. ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தவுடன், சமூகவலைதளங்களில் திமுக அமைச்சரவை பட்டியல் என்றொரு செய்தி வலம் வர ஆரம்பித்தது. ஆனால், அதில் இடம்பெற்றிருந்த சிலர், தேர்தலில் வெற்றி பெறவில்லை. இது இப்படி இருக்க, தேர்தல் முடிவுகள் வெளியானதும் மற்றொரு பட்டியல் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதனை பலர் பகிர்ந்தும் வருகின்றனர். 

 

திமுக இந்தத் தேர்தலில் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பானமையுடன் ஆட்சியை அமைக்கவிருக்கிறது. இதனை மேலும் வளர்க்கும் விதமாகவும், கட்சியை மேலும் பலப்படுத்தும் விதமாகவும் அமைச்சரவை பட்டியலை தயார் செய்து தன்னிடம் ரகசியமாக வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 

 

வேட்பாளர் பட்டியலை போலவே அமைச்சரவை பட்டியலையும் மு.க. ஸ்டாலினே வெளியிடுவார் என்றும் யார் யார் அமைச்சராகிறார்கள் என்பது அப்போதுதான் திமுகவினருக்கே தெரியவரும் என்றும் தங்கள் பெயர் இடம்பெற்றவர்கள் சந்தோஷ பெருமூச்சு விடுவர் என்றும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.