Skip to main content

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரின் பதில் என்ன?-இபிஎஸ் கேள்வி

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

What is the answer of the chiefminster holding the police in his hand? -EPS question

 

மதுரையில் சாலையில் சென்ற காருக்கு வழிவிடாத அரசு பேருந்தின் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று காளவாசல் பகுதியைக் கடந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இனோவா கார் ஓட்டுநர் முந்திச் செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஒலி எழுப்பி உள்ளார். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் வழிபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் அரசு பேருந்தை வழிமறித்து காரை நிறுத்திவிட்டு கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து பேருந்து கண்ணாடியை உடைத்ததோடு, ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி தாக்கினார். இதனால் ஓட்டுநரின் கை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டித்து அடுத்தடுத்து அரசு பேருந்துகளில் வந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பொதுமக்கள் காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

 

இந்நிலையில் மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில் 'காரில் பயணித்தவர்களுக்கு வழி கிடைக்காததால் மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வரின் பதில் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருடர்களைத் தனியாகப் பிடிக்கச் சென்ற திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் தற்போது இந்த சம்பவமும் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.