Skip to main content

கிராமம் கிராமமாக செல்லும் பாமக வேட்பாளர்.. ஜீப்பை விட்டு இறங்க சுணக்கம் காட்டும் காங்கிரஸ் வேட்பாளர்..! 

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

Sholingar constituency PMK and Congress


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் தொகுதியின் வெற்றியை தீர்மானிப்பதில் மூன்று சாதிகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை வன்னியர், முதலியார், பட்டியலினச் சமூகம். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக இந்த தொகுதியில் உள்ள 75 ஆயிரம் வன்னியர் வாக்குகளில் 50 ஆயிரம் வாக்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏவும், தொழிலதிபருமான முனிரத்தினம் நின்றுள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, எனக்கு சீட் தாங்க நான் உங்க கட்சிக்கு வந்துவிடுகிறேன் என திமுக தலைமையிடம் பேரம் பேசினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான முனிரத்தினம். அவரின் பண செல்வாக்கு மற்றும் மக்கள் செல்வாக்கை அறிந்திருந்த காங்கிரஸ் தலைமை, உங்களுக்கே சோளிங்கர் தொகுதியை வாங்கித் தருகிறோம், கட்சி மாறாதீர்கள் என சமாதானம் செய்தது. சொன்னதுபோலவே சீட் வாங்கி தந்தார் காங்கிரஸ் தலைவர் அழகிரி. திமுகவுக்கு சரியான வேட்பாளர் இந்த தொகுதியில் இல்லாததால் அவர்களும் ஒதுக்கி தந்துவிட்டனர். முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த முனிரத்தினம், மக்களிடம் ஓரளவு செல்வாக்குப் பெற்றவர், ஆனாலும் தொடர்ந்து அவருக்கே சீட் தருவதால் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுகிறது. இவர் முதலியார் சாதியின் முக்கியப் பிரபலம். தொகுதியில் சாதி கடந்து அனைத்துச் சாதி மக்களின் செல்வாக்கும் பெற்றவர்.

 

இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவான சம்பத்துக்கு அதிமுக தலைமை சீட் தரவிரும்பியது. இது எங்களுடைய கோட்டை என விடாப்பிடியாக இந்தத் தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வாங்கியது. 2016ல் தனித்து நின்று 52 ஆயிரம் வாக்குகளை பாமக இந்த தொகுதியில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுக கூட்டணி இருப்பதால் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பி மா.செ கிருஷ்ணன் களத்தில் உள்ளார்.

 

Sholingar constituency PMK and Congress

 

இவர்கள் இருவருக்கும் கடும் சவாலாக இருப்பவர் கடந்த முறை அதிமுக மா.செவாக இருந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற வழக்கறிஞர் பார்த்திபன், இந்த முறை அமமுக வேட்பாளராகக் களத்தில் உள்ளார். இவர் முதலியார் என்பதால் முதலியார் வாக்குகளில் பிரிவு ஏற்படுகிறது. இது காங்கிரஸுக்கு பின்னடைவு என்றாலும் தொகுதியில் உள்ள 43 ஆயிரம் பட்டியலின வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள், யாதவர் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக உள்ளன என்கிறார்கள் தொகுதியின் பல்ஸ் அறிந்தவர்கள்.

 

கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள் வேட்பாளர்கள். காங்கிரஸ் முனிரத்தினம் ஜீப்பை விட்டு இறங்கி ஓட்டு கேட்பதில் சுணக்கம் காட்டுவது திமுக தொண்டர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. பாமக வேட்பாளர் கிராமங்களில் நடந்து ஓடிச்சென்று வாக்கு கேட்கிறார். தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும் அதே அளவுக்குள்ள பட்டியலின, பிற சாதி ஓட்டுகள் மாம்பழத்துக்கு நெகட்டிவாக உள்ளது. அந்த ஓட்டுக்களை கவர அதிமுக பிரமுகர்களைப் பெரிதும் நம்புகிறார். காங்கிரஸ் முனிரத்தினத்துக்கு செல்ல வேண்டிய ஓட்டுக்களை அமமுக பார்த்திபன் சாதி ரீதியாகப் பிரிப்பார் என நம்பிக்கையில் பாமக வேட்பாளர் உள்ளார்.  

 

இந்த தொகுதியில், காங்கிரஸ் – பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவியிடம் உள்ளது. இதனால் அவரது ஆதரவை வாங்கி கணிசமான ஓட்டு வாங்கிவிட வேண்டுமென அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் முட்டி மோதுகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.