Skip to main content

தென்மாவட்ட அதிமுகவினரைக் கவர சசிகலாவின் அஸ்திரம்! நடுக்கத்தில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்.  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Sasikala's next political move

 

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பினார் சசிகலா.  கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி காலை பெங்களூருவிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் சசிகலா. சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தக்கூடாது என அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி அவர் அதிமுக கொடியுடனான காரிலேயே புறப்பட்டார். பெங்களூருவில் ஆரம்பித்து சென்னை வரை அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பைத் தந்தனர். 

 

இதில், வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறையப் பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று. அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்” என்று தெரிவித்தார். 

 

இப்படி வெளிவந்ததுமே சசிகலா தனது அரசியல் நுழைவு குறித்தான கருத்தைத் தெரிவித்துவிட்டே வந்தார். இதிலேயே அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலக்கம் அடைந்தார். சென்னை வந்த சசிகலா, தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் அதிமுக குறித்துப் பேசுவார் என ஒரு தரப்பினரும், அவ்வளவுதான் இனி சசிகலா அரசியலுக்கு வருவதெல்லாம் கடினம் என மற்றொரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களைப் பேசிவந்தனர். 

 

பிப்ரவரி 24ஆம் தேதி வரை தொடர்ந்து வந்த இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று (பிப்.24) முடிவுக்கு வந்தது. சென்னை திரும்பி தி.நகர் வீட்டிலிருந்த சசிகலா, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, தனது மௌனத்தைக் கலைத்து, “உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்கப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார் சசிகலா. இதனால் மீண்டும் சசிகலா குறித்தான அரசியல் பேச்சுகள் காற்றில் கலக்க ஆரம்பித்தன. 

 

சசிகலாவின் அரசியல் குறித்தான பேச்சுகள் உலா வந்துகொண்டிருந்தபோதே, தமிழ்நாட்டுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடந்து திமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி சசிகலா, இரட்டை இலையை தன் தலைமைக்குக் கீழ் கொண்டுவருவார் என மீண்டும் சசிகலா பால்டிக்ஸ் பறக்கத்துவங்கின. 

 

ஆனால், பொதுவெளியில் மௌனம் காத்த சசிகலா, அதன்பிறகு தனது ஆதரவாளர்களுடன் தொலைப்பேசி மூலம் பேசி ஆடியோக்களை ரிலீஸ் செய்து தன் பற்றியான அரசியல் பேச்சுகளை ‘ஹாட் டாப்பிக்’காகவே வைத்திருந்தார். அதேசமயம் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல் நிலை மிக மோசமாக, மருத்துவமனையிலிருந்த அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன்பின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.-ன் துணைவியார் மறைவுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினார். இதுவெல்லாம் அதிமுக மத்தியிலும், மற்றக் கட்சியினர் மத்தியிலும் சசிகலாவைக் கள அரசியலில் நிறுத்திவைத்துக்கொண்டே இருந்தது. 

 

சசிகலா பற்றியான பேச்சுகள் தொடர்ந்து எழுந்தாலும், சசிகலா நேரடியாக அரசியல் குறித்துப் பேசாததால் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலுமே ஒருவித அமைதி நிலவியது. ஆதரவாளர்களின் ஆராவாரம் குறைவதற்குள் மீண்டும் அடுத்த தீப்பொறியைக் கிளப்பினார் சசிகலா. கடந்த 17ஆம் தேதி அதிமுக தனது பொன் விழா ஆண்டை கொண்டாடியது. இதற்கு முன்னதாகவே திட்டமிட்ட சசிகலா, ‘பொன்விழா ஆண்டில் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவது. பின் எம்.ஜி.ஆர். இல்லத்திற்குச் சென்று மரியாதை செய்வது’ என பக்காவாக ஸ்கெச் போட்டு ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்தார். இதில், அதிமுகவின் துவக்க நாளான 17ஆம் தேதிக்கு முன்னதாகவே அதாவது 16ஆம் தேதியே ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்ல திட்டமிட்டு அதன்படியே சென்றார். மேலும், 17ஆம் தேதி எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வாணியம்பாடியில் பேசிய, ‘அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ எனும் அதே கருத்தை மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

 

அதேபோல், தி.நகரில் உள்ள ஜானகி, எம்.ஜி.ஆர். இல்லத்தில், ‘அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டைத் திறந்து வைத்து மீண்டும் எடப்பாடியைப் பதட்ட நிலையில் அமர்த்தினார் சசிகலா.

 

பொன்விழாவில் எடப்பாடியின் பிரஷரை எகிற வைத்த சசிகலா, அடுத்ததாக வரும் அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கரின் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்களாம். முத்துராமலிங்கருக்கு மரியாதை செலுத்தும் சசிகலா, அங்குப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் அப்போதும் அரசியல் குறித்த அடுத்த அறிவிப்போ, தகவலோ வெளிவரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இந்நிகழ்ச்சியின் மூலமாகவும், பயணத்தின் மூலமாகவும் தென் மாவட்ட அதிமுகவினரை சசிகலா கவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.