Skip to main content

121 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையைக் காட்டுவோம்! - ராமதாஸ் 

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

121 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, ''என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேட்புமனுத் தாக்கல்  தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ளன. மனுத்தாக்கல் முடிவடைந்து, பரிசீலிக்கப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு இன்னும் 20 நாட்கள் ஆகும். அதற்குப்  பிறகு தான் தேர்தல் பரப்புரை தீவிரமடையத் தொடங்கும். இவையெல்லாம் சாதாரணமான நாட்களில், சராசரியான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விஷயங்கள் ஆகும்.

 

ஆனால், நமக்கு இது சாதாரண காலமும் அல்ல... நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல...!

 

நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அவ்வாறு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரமும், கடமையும் இப்போது நமக்கு வந்திருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற இன்றே நாம் தயாராவோம்.

 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடி வருகிறோம். பத்தாண்டுகள் தொடர் போராட்டம்,  ஒருவார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் 21 உயிர்களை இழந்த தியாகம் ஆகியவற்றுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர், என்னை அழைத்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாகப் பிரிக்க வேண்டும்; அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், எனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கலைஞர், வன்னியர்களுடன் 107 சாதிகளைச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற பிரிவை உருவாக்கி அதற்கு 20% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கி பெருந்துரோகம் செய்தார். அந்த துரோகத்தால் வன்னியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பில் 20% பிரதிநிதித்துவம் கிடைப்பதற்குப் பதிலாக, 5 விழுக்காட்டுக்கும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைத்தது. வன்னியர்கள் ஏமாற்றப்பட்டனர்.

 

அப்போது இழைக்கப்பட்ட துரோகத்தை தகர்த்து வன்னியர்களுக்கு உண்மையான சமூகநீதி கிடைக்க நாம் கடந்த 32 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். நமது போராட்டத்திற்கு இப்போது தான் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணையாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது தான் அந்த முதற்கட்ட வெற்றி ஆகும். இது அரசு ஆவணங்களில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கான அரசாணை அல்ல.

 

மாறாக, வன்னியர்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாக மாற்றப்போகும் அரசாணை ஆகும். கடந்த பல நூற்றாண்டுகளாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்காமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த வன்னிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகும் ஆவணம் இதுவாகும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளாக இருந்தாலும், தமிழக அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 3 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதனால் தான் எம்.பி.சி என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டு, 32 ஆண்டுகள் ஆனாலும் கூட, வன்னியர்களால் வாழ்க்கைத் தரத்தில் உயர முடியவில்லை. இந்த நிலையிலிருந்து வன்னியர்களை மீட்டு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியாதா? என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் தான் 10.50% இடப்பங்கீடு என்ற அருமருந்து கிடைத்திருக்கிறது.

 

இதன் மூலம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட பிரதிநிதித்துவம் கிடைக்கும். மருத்துவப் படிப்பில் 5,000 இடங்கள் இருந்தால், அதில் 525 இடங்கள் வன்னியர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், வன்னியர்கள் 2,100 பேருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் வன்னிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிப்பார்கள்; அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்வார்கள். அதன்பயனாக அவர்களின் குடும்பங்கள் முன்னேறும். படிப்படியாக வன்னியர்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். அவர்களும் உள்ளடக்கிய சமூகத்தின் அங்கமாக மாறுவார்கள்.

 

வன்னியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன் என்றாலும் கூட, அந்த இட ஒதுக்கீட்டை இப்போது வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான். நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு 10.50% இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அதிமுகவுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்? என்பது தான் நம் முன் உள்ள வினா ஆகும். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது தான் அந்தக் கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

 

சென்னையில் தொடங்கி வட தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், மேற்கு தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், காவிரிப் பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான தொகுதிகள் எனத் தமிழ்நாட்டில் 121 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள் தான். எனவே, ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, ‘‘வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால் அவர்கள் வென்றார்கள்’’ என்று கூறும் அளவுக்கு இந்தத் தேர்தலில் பாட்டாளி சொந்தங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். மற்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் பணி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தொடங்கலாம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் வலிமையாக உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வென்றெடுத்துத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் இன்றே தொடங்க வேண்டும்.

 

வீடு வீடாக, கிராமம் கிராமமாக, ஒன்றியம் ஒன்றியமாக, தொகுதி தொகுதியாகச் சென்று 10.50% இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இன்று முதலே பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக இட ஒதுக்கீடு அளித்தது குறித்தும், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 10.50% இடப் பங்கீட்டை ஒழித்துக் கட்ட திமுகவும், அதன் தலைமை குடும்பத்தினரும் சதி செய்வது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அமைதியான முறையில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்தி, அதன் மூலமாகவும் பரப்புரை செய்யலாம்.

 

cnc

 

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களையும் பாட்டாளிகள் சந்திக்க வேண்டும். அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும், அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மற்ற சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் போராடவிருக்கிறார் என்ற தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

 

கும்மிடிப்பூண்டி தொடங்கி, கன்னியாகுமரி வரை அனைத்து 234 தொகுதிகளிலும் அதிமுக அணியே  வெற்றி பெற வேண்டும். அந்த தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். நமது கோட்டையாகத் திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். இந்த 121 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் போட்டி இடலாம்; யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப் படலாம்; அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பணிகளைத் தொடங்கலாம். அதைப்பற்றியெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இன்று முதலே களத்தில் இறங்கி அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள்!'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.