Skip to main content

கே.கே.எஸ்.எஸ்.ஆரை மறித்து கேள்விமேல் கேள்வி! - அந்த கிராமத்தில் இரவில் நடந்த ரசாபாசம்!

Published on 08/01/2021 | Edited on 09/01/2021

 

Question to dmk KKSSR

 

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திமுக தொடங்கிய மக்கள் கிராம சபைக் கூட்டங்கள், ஜனவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம், தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்களை, திமுகவினர் நடத்திய வண்ணம் உள்ளனர்.  

 

எம்.எல்.ஏ.வாக 8-வது முறை சட்டமன்றம் செல்லும் சீனியரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மூன்று தடவை தமிழக அமைச்சராக இருந்தவர். திமுக தற்போது எதிர்க்கட்சி என்றாலும், இன்று வரையிலும் அவர் ‘மந்திரி’ என்றே அழைக்கப்படுகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அவர், விருதுநகர் தாலுகாவிலுள்ள துலுக்கபட்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த இரவு நேரத்தில், அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஒன்று காத்திருந்தது.

 

Question to dmk KKSSR

 

ரயில் கடந்து செல்வதற்காக, அந்தப் பகுதியிலுள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் சென்றதும் கேட் திறக்கப்பட, அண்ணாச்சியின் வாகனம் மெல்ல நகர்ந்தது. அதுதான் தருணம் என்று அங்கே சிலர் காத்திருந்தனர். அண்ணாச்சியும் அவர்களது கோரிக்கை என்னவென்று அமைதியாகக் கேட்டார். அவர்களோ, பேச்சில் ஆவேசத்தைக் காட்டினார்கள். பேசியபடியே அவர்கள் சூழ்ந்துகொள்ள ஒரு நெருக்கடி வளையத்துக்குள் சிக்கினார் அண்ணாச்சி.

 

எடுத்த எடுப்பிலேயே, “எங்க ஓட்டு உங்களுக்கு வேணுமா?” என்றுதான், அவர்கள் ஆரம்பித்தனர். அடுத்து, “நீங்க ஏன் பேசல? தேவேந்திரகுல வேளாளர் குறித்து உங்க தலைவர் ஏன் பேசல? ஏன் அறிவிக்கல?” என்று வார்த்தைகளால் உலுக்கியெடுத்தனர். அதற்கு அண்ணாச்சி “உங்கள தேவேந்திரகுல வேளாளர்ன்னு அறிவிக்கிறதுல, யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. சொல்லப்போனா.. நாங்களே இதை அறிவிச்சிருக்கோம். மற்றபடி, இந்தச் சலுகை வேணும்; வேணாம்கிறது குறித்து லீடர்ஸ்கிட்ட பேசிக்கங்க. இதையெல்லாம், அந்தந்த தலைவர்கள்தான் பேசணும். நாங்க பேச முடியாது. ஆமா.. தேவேந்திரகுல வேளாளர் பட்டியலை இந்த கவர்மெண்டே அனவுன்ஸ் பண்ணலாம்ல” என்று திருப்பிக் கேட்க, அந்தக் கூட்டம் ஏனோ உஷ்ணமானது.

 

Question to dmk KKSSR

 

அவர்களைச் சமாளிக்கும் விதத்தில் அண்ணாச்சி “எல்லா இடத்திலும் நாங்க தேவேந்திரகுல வேளாளர்ன்னுதான் பேசிக்கிட்டிருக்கோம்” என்று சொல்ல, “உங்க தலைவர்தான், ஊரு ஊரா கிராமசபைக் கூட்டத்துல பேசிக்கிட்டிருக்கார்ல. அங்கே ஏன் பேசல?” என்று அவர்கள் எகிற, சூழ்நிலைக்கேற்ப அண்ணாச்சி “தளபதி இந்தப் பக்கம் வரவே இல்லப்பா.. அப்படி வரும்போது பேசாம இருந்தா சொல்லுங்க..” என்று கூல் பண்ண முயற்சித்தார். ஆனாலும், அந்தத் தரப்பு ஆத்திர வார்த்தைகளை உதிர்த்தபடியே இருந்தது. யாரோ, யாரையோ “வாடா..போடா..” என ஒருமையில் பேசி, கூச்சலிட்டனர். பிறகு அண்ணாச்சியிடம் “உங்க தொண்டர்கள் யார் யாரு இருக்கா? நீங்க என்ன செஞ்சீங்க? என்னங்க செஞ்சிட்டு இருக்கீங்க? இத்தனை நாளா நாங்க பிரச்சனைலதான இருக்கோம்” என்று தங்களது மனவலியைத் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அண்ணாச்சி அந்த இடத்தைவிட்டு நகரமுடியாதவாறு, நெருக்கமாக நின்று நேருக்குநேர் வாக்குவாதம் செய்தனர்.

 

Question to dmk KKSSR


நாம் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அவர், “அதுவந்து தேவேந்திரகுல வேளாளர்ன்னு நம்ம கட்சி சார்பா சொல்லணும்னு சொன்னாங்க. நம்ம தலைவர் சொல்லிட்டாரு. என்னைக்குன்னா.. 11-9-2020 ல் அறிவாலயத்துல வச்சி இமானுவேல் சேகரன் படத்தை திறந்து வைக்கிறாரு. அப்பவே, தேவேந்திரகுல வேளாளர்னு அறிவிக்கிறதுக்கு.. மத்திய, மாநில அரசாங்கத்தோடு போராடி அந்த உரிமையைப் பெற்றுத் தருவோம்னு சொல்லிட்டாரு. அதைத்தான் அவங்க கேட்டாங்க. சொல்லியாச்சுன்னு சொன்னதுக்கு இன்னொரு தடவை சொல்லச் சொல்லுங்கன்னாங்க. அப்புறம்,  தேர்தல் அறிக்கையிலும் வரணும்னாங்க. அவங்ககிட்ட நான் மோடி சொல்லிட்டுப் போயிட்டாரு. ஆனா.. மோடி செய்யல. அவருகிட்ட கேட்கிறத விட்டுட்டு எங்ககிட்ட கேட்கிறீங்க. நாங்க இதுக்கு முழு சப்போர்ட்டா இருக்கோம்னு சொன்னேன். வந்தவங்ககூட பிஜேபி ஆளுங்களும் இருந்தாங்க. இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல” என்றபோது, அவரது அனுபவ முதிர்ச்சி வெளிப்பட்டது.

 

கே.கே.எஸ்.எஸ்.ஆர். நடந்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், உ.பி.க்களுக்கோ ஆதங்கம். “அண்ணாச்சிக்கு 71 வயசாச்சு. இருட்டு நேரம் வேற. இப்படியா அவரை மறிச்சு ஆளாளுக்கு பேசுறது? தள்ளுமுள்ளுல ஒன்னு கிடக்க ஒன்னாச்சுன்னா யாரு பொறுப்பு? போன எம்.பி. தேர்தல்ல அவங்க கட்சி அதிமுகவோடுதான கூட்டு வச்சது. ஆளும்கட்சி மந்திரி, எம்.எல்.ஏ.வை மறிச்சு கேட்க வேண்டியதுதான? அதை விட்டுட்டு திமுக எம்.எல்.ஏ.கிட்ட வம்பு பண்ணுறாங்க. இதுல நிச்சயமா அரசியல் இருக்கு” என்றனர்.

 

தொண்டாமுத்தூரில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அமைச்சர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு ‘ஸ்டாலினை விடமாட்டோம்’ என்று வசை பாடினார். அதன் எஃபெக்டோ என்னவோ, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும் இந்த மாவட்டத்தில், ஏதோ ஒரு ரூட்டில் குடைச்சல் தர ஆரம்பித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.