Skip to main content

‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஊராட்சித் தலைவர் பதவியா?’ - கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்த வார்டு உறுப்பினர்களால் பரபரப்பு! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Is the post of panchayat leader for a woman

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுழற்சி முறையில் பட்டியலினப் பெண்களுக்கு இந்த ஊராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அந்தக் கிராமத்தினர் கருப்புக்கொடி காட்டி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மையான ஓட்டுகள் பொதுப்பிரிவினருக்கு உள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அந்தக் கிராம மக்கள், தேர்தலைப் புறக்கணித்தனர். 

 

பஞ்சாயத்து தலைவர் தேர்தல் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல்களில் கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவோ போட்டியிடவோ முன்வரவில்லை. இதனால், பட்டியல் இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி ஆகிய இருவர் மட்டும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தலில் 13 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில், 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், வார்டு உறுப்பினர்களின் பதவியிடங்கள் காலியாகவே இருந்துவந்தன. இதனால் கிராம வளர்ச்சிப் பணிகள் சுணங்கிக் கிடந்தன. இந்நிலையில், காலியாக இருந்த 6  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

 

Is the post of panchayat leader for a woman

 

இதில், 1வது வார்டுக்கு வைகுண்டசெல்வி, 2வது வார்டுக்கு கேசவன், 3வது வார்டுக்கு நடராஜன், 4வது வார்டுக்கு சுஜாதா, 5வது வார்டுக்கு யாக்கோபு, 6வது வார்டுக்கு பரிமளச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றனர். இதில், பரிமளச்செல்வியின் மகன் இறந்துபோனதால், பரிமளச்செல்வி மட்டும் பதவியேற்கவில்லை. இதற்கிடையே, பிச்சிவிளை ஊராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (22.10.2021) நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, திருச்செந்தூர் ஒன்றிய ஆணையாளர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

 

இதையொட்டி, காலை 10 மணியளவில் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த வார்டு உறுப்பினர்கள் வைகுண்டசெல்வி, கேசவன், நடராஜன், சுஜாதா, யாக்கோபு ஆகிய 5 பேரும், திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சித் தலைவரிடம் வழங்கினர். பின்னர், அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “எங்களுக்கு பதவியில் தொடர்வதற்கு விருப்பம் இல்லை. எங்களது ஊராட்சியில் மொத்தம் உள்ள 827 வாக்குகளில், 6 வாக்குகளே பட்டியல் இனத்தவருக்கு உள்ளது. குறைந்தது 50 வாக்குகளுக்கு மேல் இருந்திருந்தால், தலைவர் பதவியைப் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்திருக்கலாம். எனவே, ஊர்மக்கள் முடிவுபடி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம்” என்றனர்.

 

இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, “துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது. முறைப்படி கூட்டம் நடத்தி மினிட் புத்தகத்தில் தீர்மானமாக கொண்டுவந்து ராஜினாமா செய்தால் மட்டுமே பரிசிலீக்கப்படும்” எனத் தெரிவித்தனர். பட்டியலினப் பெண் ஊராட்சி தலைவரை எதிர்த்து வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.