Skip to main content

“அவர் நம்மைவிட்டு பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை..” - ராமதாஸ் 

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

PMK Karaikal district secretary passes away Ramadoss condolence

 

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி, நேற்றிரவு (22.10.2021) கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “நான் இட்ட பணிகள் அனைத்தையும் உடனடியாக செய்து முடிப்பது அவரது வழக்கம். திருநள்ளார் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், அரசியலிலும், பொதுவாழ்விலும் உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். மிக இளம் வயதில் அவர் நம்மைவிட்டு பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளரும், அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான தேவமணி திருநள்ளாரில் நேற்றிரவு கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கொடியவர்களால் படுகொலை செய்யப்பட்ட தேவமணி, உணர்வுமிக்க பாட்டாளி ஆவார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். அந்த பகுதி மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றவர். திருநள்ளார் பகுதியில் பொதுநலனுக்காக பாடுபட்டவர்.

 

புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டவிரோதமாக உயர்த்தியபோது, அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் நோக்குடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து வரி உயர்வை ரத்து செய்தவர்; அதன்மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். புதுவை மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி அவற்றை மூடுவதற்கு வகை செய்தவர்.

 

என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர். கட்சி வளர்ச்சி மற்றும் பொதுநலன் சார்ந்து நான் இட்ட பணிகள் அனைத்தையும் உடனடியாக செய்து முடிப்பது அவரது வழக்கம். திருநள்ளார் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், அரசியலிலும் பொதுவாழ்விலும் உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர். மிக இளம் வயதில் அவர் நம்மைவிட்டு பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை; மிகுந்த துயரமளிக்கிறது.

 

காரைக்கால் தேவமணியை படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். தேவமணியின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவரது குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்