
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதில் கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அந்த வகையில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணைக்கட்டியே தீருவோம் என உறுதியாகக் கூறியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்ட தமிழக பாஜக அனுமதிக்காது .இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். அதில், "மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கிழக்கிந்திய கம்பெனி போல வடக்கில் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது" என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, பாஜகவினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். "பாஜகவினர் பல நிலைப்பாடுகளை எடுக்கக் கூடியவர்கள். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசினார். ஆனால் இப்பொழுது மாநில உரிமை பறிக்கப்படுகிறது" எனக் கனிமொழி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.