Skip to main content

“நமச்சிவாயம் தலைமையில் ஆட்சி..!” பா.ஜ.க பொறுப்பாளர் பேச்சால் குழப்பம்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Namachchivayam led rulr  BJP leader confused by speech

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை, ராஜினாமா செய்தது.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியுடன் புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார்.  

 

இந்த நிலையில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, “நமச்சிவாயம், நமச்சிவாயம் என உச்சரிப்பதே நமது லட்சியம். கோவிலுக்குச் செல்வதும், கடவுளை வழிபடுவதும் நமது பண்பாடு. எனவே, நமச்சிவாயம், நமச்சிவாயம் என்போம். நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ.க தொண்டர்கள் ஆரவாரம் செய்தும், கரவொலி எழுப்பியும் தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர்.

 

பாஜக பொறுப்பாளரின் இந்தப் பேச்சால், புதுச்சேரி அரசியலில் சலசலப்பு உருவாகியுள்ளது. நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததும், என்.ஆர்.காங்கிரஸின் தலைவர் ரங்கசாமி அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், “நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” என பா.ஜ.க பொறுப்பாளர் பேசியிருப்பது இரண்டு கட்சி தொண்டர்களிடையேயும், அரசியல் பார்வையாளர்களிடையேயும், புதுச்சேரி மக்களிடையேயும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.