Skip to main content

மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி! மு.க.ஸ்டாலின்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
mk stalin speech



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ''மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி'' என்ற தலைப்பில் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 

 

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

 

  மக்களின் மவுனப் புரட்சிக்கு விதையிடப்பட்டுள்ளது. மக்களைத் தேடிக் கழகமும், கழகத்தை நோக்கி மக்களும் பேரார்வத்துடன் வருவதை தமிழ்நாடு மீண்டும் பார்க்கத் தொடங்கியுள்ளது. மக்களிடம் செல்வோம்.. மக்களிடம் சொல்வோம்.. மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மக்களாட்சி முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முடிவின்படி, தமிழ்நாட்டில் உள்ள 12ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் தொடங்கப்பட்டு தொய்வின்றித் தொடர்கிறது.


 

ஊராட்சி என்றாலே கிராமங்களை உள்ளடக்கியதுதானே! திருக்குவளை எனும் சிறிய கிராமத்தில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரத்தில் வளர்ந்து, இந்தியாவே அண்ணாந்து பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அரசியலின் அரிய  ஆளுமையான தலைவர் கலைஞர் அவர்களின் நீங்கா நினைவுகளுடன் திருவாரூரையடுத்துள்ள புலிவலம் பகுதியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஜனவரி 9ந் தேதி கலந்துகொண்டு, கழகத்தின் களப்பணியைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். 


 

எத்தனை ஆர்வம் பொதுமக்களின் முகத்தில்! தொடர்ந்து சோதனைகளையே எதிர்கொள்ள நேரிட்டதால் எத்தனையோ வேதனைகள் அவர்களின் உள்ளத்தில்! அத்தனையையும் நட்பு ரீதியாகவும் உறவு ரீதியாகவும் வெளிப்படுத்திட அவர்கள் நம்புவது தி.மு.கழகத்தைத்தான் என்பதை, மத்திய-மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்த அந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் நன்கு உணர்ந்து  கொண்டேன். 


 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என நமக்கு அறிவுறுத்திய தி.மு.கழகத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பிகள்  யாவரும் மக்களிடம் செல்ல வேண்டும்;. அவர்களின் நிலையை உணவேண்டும்; அதிலிருந்து நம்முடைய பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். தென்னாட்டு காந்தி எனப் போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த அடித்தட்டு மக்களிடம் செல்லப் பணித்தாரோ அந்த அடித்தட்டு மக்கள் நிறைந்த கிராமப்புறங்களைத்தான் இந்தியாவின் கோவில் என்றார் உலக உத்தமர் அண்ணல் காந்தியடிகள். எனவேதான், புலிவலம் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட போது, “நான் கோவிலுக்கு வந்திருக்கிறேன்’‘ என்று எனது உரையைத் தொடங்கினேன். 


 

கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என நமது பகுத்தறிவு நிலைப்பாட்டை பராசக்தி படத்திலேயே வெளிப்படுத்தியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். கிராமங்கள் எனும் கோவில்கள் அ.தி.மு.க ஆட்சியில் கொடியவர்களின் கொள்ளைக்கு உள்ளாகி உருக்குலைந்து இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த வக்கில்லாத அடிமை ஆட்சியாளர்களும், அவர்களை ஆட்டுவிக்கும் டெல்லி எஜமானர்களும் சேர்ந்து கொண்டு கிராம மக்களை மட்டுமல்ல -நகராட்சி-மாநகராட்சி மக்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வஞ்சித்து வதைத்துக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் வெளிப்படுத்திய உள்ளக் குமுறலிலிருந்தே உணர முடிந்தது. 


 

 கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத திருவாரூர் மாவட்ட மக்களின் அவல நிலையை ஊராட்சி சபை கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய பெண்மணி விவரித்தபோது நெஞ்சம் கலங்கியது. திராவிடர் கழகத் தோழர் அருண்காந்தி, முஸ்லிம் ஜமாத் பிரமுகர் உள்ளிட்ட பலரும் இன்றைய ஆட்சியாளர்களின் அலங்கோலங்களையும் தலைவர் கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் தங்கள் நிலை இப்படி இருந்திருக்காது என்பதையும் உருக்கத்துடன் விவரித்தது இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. எத்தனை கோடிப் பேர் வாழ்வின் நம்பிக்கை ஒளியாக விளங்கியிருக்கிறார் நம் தலைவர்! அந்த ஒளி அணைந்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர்களிடம் நான் உறுதியளித்தேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் என் உருவத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் உள்ளத்தை உணர்ந்து கொண்ட காரணத்தால், தன் கையை என்னிடம் ஒப்படைத்து நெகிழ்ந்த தருணத்தை மறக்க இயலாது.

 

திருவாரூர் புலிவலம் ஊராட்சி சபைக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து தஞ்சை நாஞ்சிக்கோடையில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்திலும் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்களிடம் கொட்டிக் குவிப்பதற்கு ஏராளமான கோரிக்கைகள் இருப்பதை உணர்ந்தேன். குறிப்பாக, ஆண்களைவிட பெண்கள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் விமர்சனங்களோடும் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். 

 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களின் இன்றைய நிலை, நெற்களஞ்சியமாக இருந்தது வெறும் புற்களஞ்சியமாகி விவசாயிகளின் வீட்டில் சோறு இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. விவசாய விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை, விவசாயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை, நூறு நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை, விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளோ தொழிலகங்களோ உருவாக்கப்படவில்லை என்பதைப் பெண்கள் கண்ணீரோடு எடுத்துக்கூறி, நாங்கள் வாழ வேலை கொடுங்கள் எனக் கேட்டபோது, இதயத்தில் ஓராயிரம் இடிகள் தாக்கியது போல இருந்தன. 

 

இளைஞர்கள் பலரும் சொந்த மண்ணை விட்டுவிட்டு வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. அவர்களுக்குத் தங்கள் மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் பல தொழில் மண்டலங்களை உருவாக்கி, அந்தந்தப் பகுதிகளிலேயே வேலை வாய்ப்பு அளிப்பது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் வாய்ப்பினை அந்தத் தேர்தல் முடிவுகள் தரவில்லை என்றாலும், எந்த நேரமும் வரவிருக்கும் தேர்தலில் நமக்கான வாய்ப்பை நம்மைவிட அதிகமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை ஊராட்சி சபை கூட்டங்களில் நேரடியாகக் காண முடிந்தது. 

 

நேற்றைய தினம் தீரர் கோட்டமாம் திருச்சி மாவட்டத்திலும் இன்றைய தினம் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாவட்டத்திலும் தொடர்ந்திடும் ஊராட்சி சபை கூட்டங்கள்  ஒவ்வொன்றும், மக்களுக்கெதிரான மத்திய-மாநில மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சி மலர்வதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைந்துள்ளன. கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களில் மட்டுமின்றி, கழகத்தின் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களும், அவருடன் தயாநிதி மாறன் அவர்களும்,கழகத்தின் முதன்மைச் செயலாளர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்தின் நிர்வாகிகளும் தொகுதிப் பொறுப்பாளர்களும் பங்கேற்ற ஊராட்சி சபை கூட்டங்களிலும் இதே தன்மைதான் எதிரொலித்துள்ளன. 

 

கொட்டித் தீர்க்க முடியாத அளவிற்கான வேதனை மிகுந்த  நிலையையும் ஆட்சியாளர்களின் அலட்சிய-அராஜகப் போக்கையும் பொதுமக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போதே, திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கையும் தமிழ்நாட்டை சமூக மறுமலர்ச்சி மாநிலமாக மாற்றிய திட்டமுமான சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் வகையில் பொருளாதார இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கிறது மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு. அதற்கு அடிமைச் சேவகம் செய்யும் அ.தி.மு.க.வோ நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்ப்பது போல பாசாங்கு குரல் கொடுத்துவிட்டு, வாக்களிப்பின்போது வெளியேறி, மோடி அரசின் மோசடி செயலுக்கு ஆதரவு அளித்துள்ளது. 

 

வஞ்சக ஆட்சியாளர்களால் நெஞ்சமெல்லாம் புண்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் விடியலுக்கான ஒரே நம்பிக்கையாக எதிர்பார்த்திருப்பது உதயசூரியனைத்தான். அது உதிக்கின்ற தேர்தல் நாளுக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை-எதிர்பார்ப்பை - நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையில் உங்களில் ஒருவனான நானும், என்னுடன் துணை நிற்கும் உடன்பிறப்புகளான நீங்களும் இருக்கிறீர்கள். 
 

mk stalin speech


அவல ஆட்சிகளை அகற்றிட வேண்டிய அவசியத்தையும், கழக ஆட்சி மலர வேண்டிய காரணங்களையும் விளக்கி தலைமைக் கழகத்திலிருந்து ஏற்கனவே துண்டறிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறுகிற பகுதியிலும், கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த ஊராட்சியில் உள்ள கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, மக்களில் ஒருவரைக்கூடத் தவிர்க்காமல், அவர்களிடம் இந்த துண்டறிக்கைகளை வழங்கி, அது பற்றி விளக்கி, ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றிட அழைப்பு விடுக்க வேண்டும்.  நேரடியாகப் பங்கேற்கிற மக்களின் எண்ணிக்கை பெருகும்போது, ஆட்சியாளர்களால் மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அகல-நீள-ஆழத்தை நன்றாக அறிந்துகொள்ள முடியும். பங்கேற்க இயலாத சூழலில் இருப்பவர்களுக்கும்கூட துண்டறிக்கைகள் வாயிலாக உண்மை நிலவரம் தெளிவாகத் தெரிய வரும்.

 

தலைமைக்  கழகத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தாங்கள் பங்கேற்கும் ஊராட்சி சபை கூட்டங்களுக்கு முன்பாக ஊராட்சி செயலாளரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து, அவரது கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதுபோலவே, ஊராட்சியில் உள்ள மூத்த பிரமுகர்கள்-அனுபவம் வாய்ந்த பொதுமக்கள் ஆகியோரையும் நேரில் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றிட வேண்டும்.

 

இது உங்களுக்கான அன்பு அறிவுரை மட்டுமல்ல. தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் உங்களில் ஒருவனான எனக்கும் இது மிகவும் பொருந்தும். அதனால்தான், ஊராட்சி சபை கூட்டம் தொடங்கப்பட்ட ஜனவரி 9ஆம் நாள் திருவாரூர் புலிவலத்தில் பொதுமக்களைச் சந்தித்ததுடன், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் சந்தித்து அளவளாவினேன். அதுமட்டுமின்றி, ஊராட்சிகள் தோறும் கழகம் அமைத்துள்ள பூத் கமிட்டியின் உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அவர்களின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் கேட்டறிந்து, அவற்றை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் யோசனைகளை வழங்கினேன். 

 

கழகத்தின் தொகுதிப்  பொறுப்பாளர்கள் இத்தகைய ஆலோசனைகளைக் கட்டாயம் நடத்திட வேண்டும். ஊராட்சிகள் தோறும் பூத் கமிட்டி என்பது ஒரு மாபெரும் பணி. அதனைச் செவ்வனே செய்வதற்கு கழகம் போன்ற மகத்தான இயக்கத்தால்தான் முடியும். பூத் கமிட்டிக் கூட்டம் நடக்கும்போது, அதில் இடம்பெற்றிருப்பவர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களா என்பதை அவர்களைப் பெயர் சொல்லி அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்து உறுப்பினர்போல இயல்பான-இனிமையான பழகுதலுடன் ஆலோசனைகள் நடத்தப்படவேண்டும். இதில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் செயலாற்றும்போதுதான் அடிக்கட்டுமானம் பலப்படும். அதுதான் வெற்றிக் கோட்டையைக் கட்டுவதற்கு உறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கும்.

 

ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகக் களத்தில் முக்கியமானவை. தங்கள் பொன்னான வாக்குகளை கழகத்திற்கு அளிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அவர்களை நேரில் சந்தித்து, வாக்குகள் சிதறாமல் சேகரிக்கின்ற பணியைத் தொய்வின்றித் தொடரவேண்டியது நமது பெருங்கடமை. 

 

தலைமைக் கழகம் வகுத்துத்  தந்த அட்டவணைப்படி, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்புடனும் ஆலோசனையுடனும் அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எங்கெங்கு ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் புதிய  கொடிக்கம்பம் நடப்பட்டு, அதில் தி.மு.கழகத்தின் கறுப்பு-சிவப்பு இருவண்ணக் கொடி ஏற்றப்பட வேண்டும். 12ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் பட்டொளி வீசும் இருவண்ணக் கொடி, உதயசூரியன் ஒளியில் மிளிரும். அதுவே ஆட்சி மாற்றத்துக்கு கட்டியம் கூறும் உயரமான சாட்சியாக அமையும்.
 

நல்லாட்சிக்கான  அடித்தளத்தை ஊராட்சி சபைக் கூட்டங்களின் வாயிலாகத் தொடங்கியுள்ளோம். மக்களின் பேராதரவுடன் கழக ஆட்சியை அமைப்போம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
When the election comes PM Modi will love the people CM MK Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

When the election comes PM Modi will love the people CM MK Stalin

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.