Skip to main content

புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், புலியை எதிர்ப்போம்! - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #2

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

தென்மாவட்டங்களில் தொகுதி தோறும் சைக்கிள் பேரணி நடத்தி, அங்கங்கே சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தினார்கள் தமிழக அமைச்சர்கள். சைக்கிள் ஓட்டியதையே, இமாலய சாதனை என்று மார் தட்டினார்கள். இன்னும் கூட நிறையப் பேசினார்கள். அமைச்சர்கள்  நிகழ்த்திய உரையில் ஒரு சில துளிகளை இங்கே உதிர்த்திருக்கிறோம்.  

 

admk rally



வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

புலியை எதிர்ப்போம்!

புளியோதரையை பத்தி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் சொன்னார் தெரியுமா? புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், களத்தில் இறங்கிவிட்டால், புலியை எதிர்த்து நிற்கும் தைரியம் உள்ளவர்களாக அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு எத்தனையோ, வசதி வாய்ப்புக்கள் இருந்தும் அவர் நம்மோடு சைக்கிள் ஓட்டிவந்தார். அதை நாம் பார்த்தோம்.  ரோட்டுல ரெண்டு பக்கத்துலயும் கடையில இருக்கிறவங்க, அங்கே கடையில் நின்று வாங்கும் தாய்மார்கள், “நம்ம அமைச்சர் போறாரு.. பாரு..” இப்படி சொல்லும்போது பார்த்தீங்கன்னா.. ஒரு தாய்மார்கூட முகம் சுளிக்காமல், என் உடன்பிறந்த சகோதரன் செல்கிறான் என்ற உணர்வோடு அமைச்சரைப் பார்த்தார்கள். நான் ஒரு ஸ்டெப் பேக்ல வந்துட்டேன். நம்ம ராதா அண்ணனும், அமைச்சரும் முன்னால போகட்டும். தொகுதிக்குள்ள வர்றத  மக்கள் பார்க்கட்டும். அமைச்சரைப் பார்த்த 20000 பேர்ல ஒருத்தர்கூட முகம் சுளிக்காமல், இன்முகத்தோடு, தான் பெற்ற பிள்ளை போவதைப் போல ரசித்துப் பார்த்த அந்தக் காட்சி என் நினைவுக்கு வருகிறது. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறவர்களுக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய பேரணி இதுவென்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதுகண்டு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே மகிழ்ந்துபோனார்.

 

r.b.udayakumar



எதிர்க்கட்சியினர் சைக்கிள் ஓட்ட முடியுமா?

அமைச்சர் நினைத்திருந்தால் காரில் வந்திருக்கலாம். ஆனால், வியர்க்குது விறுவிறுக்குது அவருக்கு. ஏன்னா, சைக்கிள் ஓட்டி ரொம்ப காலமாச்சு. இளைஞரணில இருக்கும் போது ஓட்டினது. இப்போது மாவட்ட கழகத்தின் செயலாளர்; மாண்புமிகு அமைச்சர் வேற. இனிமேல் சைக்கிள் ஓட்டி அவர் அமைச்சராகணுமா? அவர் எப்பவுமே இந்த விருதுநகர் மாவட்டத்துக்கு அமைச்சர்தான். அப்படியிருக்கும்போது, தொண்டர்கள் ஓட்டி வருகிறார்கள். இளம் சிங்கங்கள், தங்கங்கள் ஓட்டி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென்றுதான் அமைச்சரே ஓட்டி வருகிறார். இந்த சைக்கிள் பேரணியை, இன்றைக்கு எதிர்க்கட்சிக்காரங்க பார்க்கிறாங்க. ஆயிரம் பேரு வெள்ளைச் சீருடையில் போறாங்க. அதுவும் அமைச்சர்கள் வேற சைக்கிள் ஓட்டிட்டு போறாங்க. அப்ப, நம்ம வேற சைக்கிள் ஓட்டணுமான்னு அவங்க யோசிக்கிறாங்க. எதை எடுத்தாலும் போட்டி போடுவாங்கள்ல. இப்ப வா மவனே.. நீயும் சைக்கிள் ஓட்டு. எதிர்க்கட்சிக்காரன் எவனுக்காச்சும் தில்லு இருந்தால், சைக்கிள் ஓட்டு பார்க்கலாம்.

 

 


எல்லாமே ஏற்பாடுதான்!

“சைக்கிள் ஓட்டும் அளவுக்கு வலிமை பெற்ற இளைஞர்கள் அதிமுகவில் மட்டுமே இருக்கிறார்கள்.” என்று மேடைப் பேச்சில் அமைச்சர்கள் இருவரும் பீற்றிக்கொள்ள,  “அட, போங்கப்பா.. எல்லாமே செட்டப்பு, பில்டப்பு” என்கிறார்கள் அக்கட்சியினரே. மேலும் அவர்கள் “பேச்சிலும், செயலிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைக் காட்டிலும் பெரிதாக ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்று மற்ற அதிமுக அமைச்சர்களும் போட்டி போடுகிறார்கள். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று ரேட் பேசிவிட்டுத்தான் இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். திருமங்கலத்திலிருந்து ஊர் ஊருக்கு வந்து ‘சீன்’ போடும் இந்த டீமுக்கு புது சைக்கிள் வேறு கிடைத்துவிடுகிறது. சாப்பாட்டிலிருந்து சகலமும் கொடுத்தாக வேண்டும். சைக்கிள் ஓட்டியதோடு இவர்கள் பணி முடிந்துவிடுவதில்லை. பொதுக்கூட்டத்திலும் கடைசி வரையிலும் உட்கார வேண்டும். மேடையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரை யார் உச்சரித்தாலும் கை தட்ட வேண்டும். சைக்கிள் ஓட்டியதிலிருந்து, கூட்டம் நடத்தியது வரை அனைத்துமே பணத்தை இறைத்து, பக்காவாக நடந்த ஏற்பாடு.” என்றார்கள் வேதனையோடு.

ஆட்சியின் ஒராண்டு சாதனையை மக்களிடம் விளக்குவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். அவர்களுக்காக ‘ஓ’ போடுவோம்! மக்களிடையே நேரடியாக காமெடி காட்சிகளை அரங்கேற்றி வருவதற்காக கை தட்டுவோம்; விசிலடிப்போம்!

அடுத்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.. .

"கடப்பாரையை வளைத்து கபாலியை அடித்த எம்.ஜி.ஆர்" - அதிமுக அமைச்சர்களின் காமெடி ஓட்டம் #1  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.