Skip to main content

கருநாடக இடைத்தேர்தல் முடிவு - பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி! கி.வீரமணி 

Published on 08/11/2018 | Edited on 08/11/2018



 

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு ஏற்பட்ட படுதோல்வி - எதிர்காலத்தில் அது முற்றிலும் தோல்வி அடையும் என்பதற்கான அறிகுறி என்றும், எல்லா வகையிலும் தோல்வி காணும் மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட - மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 அண்மையில்  கருநாடக  மாநிலத்தில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் காங்கிரசு - ம.ஜ.த. கட்சி கூட்டணி 4 இடங்களில் பெருவெற்றி பெற்றுள்ளது.
 

ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில்கூட ஏற்கெனவே எடியூரப்பா (2014 இல்) 3 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது - அங்கும் சரிவுதான்!
 

இப்போது அவரது மகன் இராகவேந்திரா என்பவர் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதே தொகுதியில் - கடும் முயற்சிக்குப் பின்னரும் - வெற்றி பெற்றிருக்கிறார் என்பது, கருநாடகத்தில் பா.ஜ.க.விற்கு தோல்வி முகம் தொடருகிறது என்பதையே காட்டுகிறது!
 

கருநாடகாவில் தோல்விப் படலம்!
 

பெல்லாரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. 2004 முதல் வெற்றி பெற்ற ஒரு தொகுதி - 14  ஆண்டுகளாக அதன் வசம் இருந்த தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பா வெற்றி பெற்றிருக்கிறார் - அதுவும் 2.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்!
 

மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. வெற்றி என்பதுதான் இந்த 5 தொகுதி இடைத்தேர்தல்களில் அதற்குக் கிடைத்த ஆறுதல் பரிசு ஆகும்!


பெல்லாரி தொகுதியை எப்படியும் இம்முறை பா.ஜ.க. தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்று  படாதபாடு பட்டது அக்கட்சி!
 

அங்கு செல்வாக்குள்ள மனிதராகக் கருதப்படும் பி.சிறீராமுலு போன்றவர்களே கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டார்கள்.
 

எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை!


தென்மாநிலங்களைக் குறி வைக்க பா.ஜ.க. - மோடி - அமித்ஷா பல தனிக் குழுக்களை ஆதித்ய பிர்லா - அம்பானி போன்ற பல கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அறிவு ஜீவிகள் குழு - குறிப்பாக கேரளாவிலிருந்து கருநாடகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் மோடியின் நெருக்கக் குழுவில் ஒருவராக உள்ள எம்.பி.,  போன்றவர்களிடம் தனிப் பொறுப்பே கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அரசியல் ஊடகங்களில் பேச்சுகள் கசிந்துள்ளன.
 

ஆந்திரா - தெலங்கானாவில் நிலைமை என்ன?
 

ஆந்திராவில், பா.ஜ.க. இனி எளிதில் பழைய செல்வாக்கைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது.


தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசமும், காங்கிரசும்  இணைந்து கூட்டணியாக இணைந்து சந்திரசேகர ராவையும், பா.ஜ.க.வையும் எதிர்ப்பதால் - இரண்டு கட்சிகளுக்கும் (தெலங்கானா  டி.ஆர்.எஸ். ஆளுங்கட்சி - பா.ஜ.க. இருவருக்கும்) வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
 

கேரளாவில் மதவெறி ஆயுதம்!
 

கேரளாவில் - சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்திக் கடமையாற்றும் கேரள மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மத உணர்வை விசிறிவிட்டு, குளிர்காய நினைத்து திட்டமிட்டே பா.ஜ.க. அங்கு மதக்கலவரங்களுக்குத் தூபம் போட ஏற்பாடு ஆன விஷயம் அங்குள்ள பா.ஜ.க. தலைவர் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி - அம்பலமாகி விட்டது!


‘கடல் வற்றிக் கருவாடு தின்னக் காத்திருந்த (பா.ஜ.க.) கொக்கு குடல்வற்றி செத்த’ பழைய உவமையை நினைவூட்டுவதாக உள்ளது பரிதாபத்திற்குரிய பா.ஜ.க. நிலை!
 

தமிழ்நாட்டின் நிலைமை!
 

தமிழ்நாட்டில் தூண்டிலைத் தூக்கி அலைகிறார்கள் - திரைப்பட நடிகர்களின் அரசியல் கட்சி - ஒரு கட்சி கருவிலேயே இருக்கிறது! எப்போது பிறக்கும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியாத புதிராக இருக்கும்போது, அதனைத் தூக்கிக் கொஞ்சி மகிழுவதுபோல, காட்டி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறார்கள். - குழந்தை கழுத்தில் உள்ள செயினைக்கூட கவரத் துடிப்பவர்களைப்போல, அரசியல் புரோக்கர்கள்மூலம் செய்த முயற்சிகள் வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையை வாட்டி வதைக்கிறது!


தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டு என்றாலோ ஓட்டம் பிடிப்பவர்களாகவே அத்துணைக் கட்சிகளும் உள்ளன! வேண்டுமானால், சில கூலிப் படைக் கட்சிகள் அகப்படக்கூடும்! காரணம், இங்குள்ள பெரிய கட்சிகளோடு போட்டியிடும் நிலையில் இல்லை.  தமிழ்நாட்டில் என்னதான் ஊடகங்களால் ஊதிப் பெருக்கம் நடைபெற்ற போதிலும்கூட - பா.ஜ.க. போட்டிப் போடுவது  ‘‘நோட்டா’’ வுடன் மட்டுமே!
 

இது பெரியார் மண்தான்! திராவிட பூமிதான்  என்பதை மாற்றிட எவ்வளவு பெரிய வித்தைகள் செய்தாலும் நடக்காது - பிழைக்காது.
 

என்றாலும், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் குறிப்பாக மதச்சார்பின்மை சமூகநீதியில் நம்பிக்கையுள்ள கட்சிகள், மக்கள் விரோத பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று உண்மையிலேயே கருதுபவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தன்முனைப்புக்கு இடம் தராமல், பொதுநோக்கம் நிறைவேறிட, பொது எதிரியை வீழ்த்திடுவது முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடந்துகொள்வது மிகவும் அவசர அவசியம்!
 

பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி - சிக்கல்!
 

கருநாடக இடைத்தேர்தல் முடிவு ஒரு எச்சரிக்கை மணி பா.ஜ.க.விற்கு!
 

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவுக்குப்பின் பொருளாதாரம் மட்டுமல்ல அதைக் காப்பாற்ற வேண்டிய, ஒழுங்குபடுத்த வேண்டிய ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகளும்கூட பா.ஜ.க., மோடி அரசின் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்ப முடியவில்லை.

k.veeramani



விண்ணை முட்டும் விலைவாசி, உச்சமான வேலையில்லாத் திண்டாட்டம் (69 சதவிகிமாக கடந்த 2 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது என்று இந்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது) - பெட்ரோல், டீசல் விலைகளின் விலையேற்றங்கள் - விவசாயிகளின் தற்கொலை; பல்லாயிரக்கணக்கில் கல்வித் துறையில் காவி மயம் - இப்படி எல்லாவற்றிலும், எல்லா தரப்பு மக்களின் ஏமாற்றத்திற்கும் ஆளாகி, எதிர்ப்பையும், அதிருப்தியையும் சந்திக்கிறது மோடி அரசு!


மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர் என்பதைப்  புரிந்துகொள்ளாமல், ‘மகுடி வாசிப்பது’ பயன்படாது!

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்