Skip to main content

''அண்ணே கவலைப்படாதீங்க'' என சொல்லி கலைஞருக்கு காரோட்டிய... ஸ்டாலின் பேச்சு

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன் எழுதிய “வாழ்வும் பணியும்” புத்தக வெளியீட்டுவிழா ஒரு தனியார் மண்டபத்தில் 05.09.2019 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் மு.கண்ணப்பன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின்,
 

1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல்முதலில் குரல் கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் கலைஞர் அவர்கள் தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தார்.
 

 mkstalin


 

அதை எதிர்த்தால் நிச்சயமாக ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், டெல்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். “அன்னை இந்திரா காந்தி கொண்டுவந்திருக்கும் நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் ஆதரித்தால் மகிழ்ச்சி; ஆதரிக்கவில்லை என்று நாங்கள் கவலைப்படமாட்டோம். ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை இந்த தமிழ்நாட்டில் இருந்து அடுத்த விநாடியே நாங்கள் கவிழ்த்துவிடுவோம்.” என்று வந்த தூதுவர்கள் சொன்னார்கள்.
 

அவர்களிடத்தில், "ஆட்சியென்ன? எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.
 

அதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் தீர்மானத்தையே படித்தார்ள். அந்த தீர்மானத்தை முன்மொழிந்து படித்துவிட்டு வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்;
 

நெருக்கடி நிலையை இரத்து செய்ய வேண்டும்.
 

கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். போன்ற தீர்மானங்களைப் படித்த அடுத்த 10வது நிமிடம் தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கவிழ்க்கப்படுகிறது.


 

கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகு ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டவர்கள் மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்ட கொடுமைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தக் கொடுமையில் தான் ‘சிட்டிபாபு’ என்கின்ற கழக தங்கத்தை இழந்தோம். சாத்தூர் பாலகிருஷ்ணன் என்கின்ற கழக கொள்கை வீரனை நாம் இழந்தோம்.
 

அதைத்தான் நம்முடைய ராசா அவர்கள் பேசுகின்ற போது குறிப்பிட்டுச் சொன்னார்.
 

சாத்தூர் பாலகிருஷ்ணன் இறந்துவிட்டார் என்ற செய்தி, சென்னையில் இருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞருக்கு கிடைக்கிறது.
 

அப்போது, அண்ணன் கண்ணப்பன் அவர்கள் மற்றும் கழக முன்னனியினர் அனைவரும் உட்கார்ந்திருக்கிறபோது “நாம் நேரடியாக மதுரைக்கு செல்ல வேண்டும். சாத்தூர் பாலகிருஷ்ணன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும்” என்றார்.
 

தற்போது இளைஞர் அணியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அலுவலகம் அன்பகம்.  அன்றைக்கு, தலைமைக் கழகமாக இருந்தது அன்பகம் தான்.


 

mkstalin



காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சொல்லாமல் கொல்லாமல் போய்விட்டார். பிறகு யாரை வைத்து கார் ஓட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்த அண்ணன் கண்ணப்பன் சொன்னார். “அண்ணே கவலைப்படாதீர்கள் நான் கார் ஓட்டிக்கொண்டு வருகின்றேன்” என்று சொல்லி, அண்ணன் கண்ணப்பன் கார் ஓட்ட அருகில் தலைவர் கலைஞர் அவர்கள் உட்கார பின்னால் ஓ.பி.இராமன் அவர்கள் உட்கார்ந்திருக்க, அதற்குப்பிறகு கார் திருச்சிக்கு வருகிறபோது, அன்பில் தர்மலிங்கம் அவர்கள் காத்திருந்து ஏறிக்கொள்ள, அதற்குப்பிறகு மறைந்த சாத்தூர் பாலகிருஷ்ணன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தியாக வரலாற்றுகளை எல்லாம் இந்த நூலில் மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
 

டி.ஆர்.பாலு அவர்கள் நேரமில்லா காரணத்தினால் பேசவில்லை, நான் கூட அவரிடத்தில் இன்று காலையில் கேட்டேன். “நாங்கள் எல்லோரும் சிறைக்கு சென்றபிறகு, கொஞ்ச நாள் கழித்துதான் வந்தீர்கள். உங்களுடைய தம்பி திருமணம் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடந்ததே, அது எப்போது?” என்று கேட்டேன்? “நான் சிறைக்கு வந்ததற்குப் பிறகுத்தான் திருமணம் நடந்தது” என்று சொன்னார். எனவே, அந்தத் திருமணத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு அண்ணன் கண்ணப்பனைப் பற்றி பேசுகின்ற போது தலைவர் கலைஞர் சொன்னார், “எனக்கு காரோட்டி வந்த கண்ணப்பன்” என்று அந்தப் பட்டத்தை அன்றைக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
 

எனவே, எப்படிப்பட்ட தியாகத்தின் மீது இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. தியாகிகள் நிறைந்த ஒரு இயக்கமாக இந்த இயக்கம் வளர்ந்திருக்கின்றது. அந்த இயக்கத்திற்கு இன்றைக்கு தலைவனாக இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து எண்ணிப் பார்க்கின்ற போது நான் உள்ளபடியே பெருமைப்படுகின்றேன் – மகிழ்ச்சியடைகின்றேன்.
 

தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எத்தனையோ பேர் உதவிகள் செய்திருக்கலாம், எத்தனையோ பேர் சோதனைகள் – வேதனைகள் வருகிறபோது பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லியிருக்கலாம். இப்படி பலர் இந்த இயக்கத்தில் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி தலைவர் கலைஞருக்கு காரோட்டியவர் ஒருவர் உண்டென்று சொன்னால் அது கண்ணப்பனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெருமை நம்முடைய கண்ணப்பன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.


 

அதனால்தான், ஒருமுறை அல்ல; இரண்டு முறை அண்ணன் கண்ணப்பன் அவர்களை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
 

திராவிட இயக்கம் இன்றைக்கு என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்களே?
 

அவர்களுக்கெல்லாம், நான் சொல்லவிரும்புகிறேன், தமிழக கோவில்களில் இன்றைக்கு தமிழில் வழிபாடு நடக்கின்றது என்றால் அது தி.மு.க ஆட்சியால் தான். அப்போது அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர் அண்ணன் கண்ணப்பன் அவர்கள் தான்.
 

திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்களே?
 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இருக்கவேண்டும் என்று சட்டத்தை உருவாக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அப்போது, அமைச்சராக இருந்தவர் அண்ணன் கண்ணப்பன் அவர்கள் தான். இவ்வாறு பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.