Skip to main content

“அப்போதைய அதிமுக அரசுக்கும் இப்போதைய அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” - பாமக நிறுவனர் ராமதாஸ்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

I thank the then AIADMK government and the present government

 

தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது முதல் வகுப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

அப்போதைய அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அரசாணை வெளியிட்டதற்கு பலதரப்பினரும் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். அதேபோல் தமிழில் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி, சில திருத்தங்களை அரசு செய்துள்ளது. தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலான 20% இடஒதுக்கீட்டின் பயன்கள் முழுக்க முழுக்க தகுதியானவர்களுக்கு மட்டும் சென்றடைவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

 

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கத்துடன், 2010ஆம் ஆண்டில் அப்போதைய கலைஞர் அரசு கொண்டு வந்த 20% இடஒதுக்கீட்டை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதால், முழுக்க, முழுக்க தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இடஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அதன்படியே கடந்த 2020ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு சட்டத் திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தத்தை 20.01.2020 அன்று வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் அடிப்படையில்,  புதிய வழிகாட்டு விதிகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு விதிகளின்படி அரசின் எந்த வேலைவாய்ப்பாக இருந்தாலும் அதற்கான அதிகபட்சக் கல்வித் தகுதியை ஒன்றாம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும்தான் 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இதனால் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் எந்த நோக்கத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி போராடியதோ, அந்த நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குக் காரணமான சட்டத் திருத்தத்தை கடந்த ஆண்டு இயற்றிய அப்போதைய அதிமுக அரசுக்கும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அரசாணை பிறப்பித்த இப்போதைய அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

அதே நேரத்தில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீடு எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக மேலும் ஒரு கட்டுப்பாட்டை தமிழக அரசு விதிக்க வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் இந்த சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்த விரும்பும் கூடுதல் கட்டுப்பாடு ஆகும். கடந்த காலங்களில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இடஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கில வழியில் போட்டித் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். இப்போதும் கூட ஆங்கில வழியில் படித்தவர்கள் தமிழ் வழியில் படித்ததாக சான்றிதழ் பெற்று, ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதி, 20% சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. அது தடுக்கப்பட வேண்டும்.

 

அது மட்டுமின்றி, அரசு வேலைவாய்ப்புகளில் 20% சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். தமிழைப் பயன்படுத்துவது போட்டித் தேர்வுகளிலும், பணியிலும் தொடர வேண்டியது கட்டாயமாகும். அதற்காக போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கூடுதல் நிபந்தனையையும் புதிய அரசாணையில் அரசு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.