Skip to main content

தமிழகத்தில் இந்தி மொழி அரசியலாக்கப்படுகிறது... ஞானவேல் ராஜா

Published on 27/09/2019 | Edited on 27/09/2019
producer gnanavel raja



கோவையில் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்ட குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழா 27.09.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 
 

விழாவில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:- 
 

இந்தியை மத்திய அரசு திணிப்பதாக இல்லை. மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. இதனை தமிழகத்தில் அரசியலாக்குகிறார்கள். பொது மொழி ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகிறது.
 

தமிழகத்தில் 90 சதவித பேருக்கு இந்தி தெரியாததால்தான் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம். பிரதமர் மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்.

 

producer gnanavel raja



 

 

பள்ளிகளில் இந்தி மொழி இருப்பது நல்லது. இங்கு இருக்கும் குழந்தைகள் புரிந்து கொண்ட அளவுக்கு, இங்கு உள்ள மூத்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் எவ்வளவோ நல்லது. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர்களுக்குள் ஒரு பயம் இருக்கிறது. இந்தியை எல்லோரும் கற்றுக்கொண்டால் நாமும் கற்க வேண்டியது வரும், மோடி பேசுவது புரிந்து விட்டால் நாமும் மாறிவிடுவோமோ என்ற ஒரு பதட்டமும், பயமும் இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது என்றார்.
 

இந்த விழாவில் பேசிய கஸ்தூரி ராஜா, பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்தியாவிற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார். பிரதமர் மோடியால் இந்தியா காப்பாற்றப்பட்டுவிட்டது. இனி தமிழகம் மட்டும்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.