Skip to main content

குரங்கணி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று வனத்துறை அமைச்சர்  பதவி விலக வேண்டும்: ஈஸ்வரன்

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
eswaran

 

குரங்கணியில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு வனத்துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:

 

’’குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்பிற்கும், அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாது போல தமிழக அரசு கை நழுவ முயல்வது ஏற்புடையதல்ல. ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படுகிறது என்றால் அதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாமல் வனத்துறை அமைச்சர் அரசாங்கத்தின் மீது எந்தவொரு தவறும் இல்லாததை போல, மலைப்பகுதிக்கு சென்றவர்கள் அனுமதியே வாங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அனுமதி வாங்காமலே யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனத்திற்குள் செல்லும் நிலைதான் தமிழகத்தில் உள்ளதா ?. ஆனால் மலையேற்றம் சென்றவர்கள் முறையான அனுமதி பெற்றே குரங்கணி மலைக்கு சென்றதாக ஆதாரத்தை சமர்பித்திருப்பது விந்தையாக இருக்கிறது. இது ஆளுங்கட்சியினருக்கு புதிதல்ல. 

 

கடந்த ஆண்டு வறட்சியினால் 400 –க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் கூட,  தமிழக அரசாங்க தரப்பில் விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிரிழக்கவில்லை என்றே விளக்கம் கூறப்பட்டது. ஆளுங்கட்சியானது மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது தகுந்த தீர்வை தர வேண்டுமே தவிர, பிரச்சினைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாதது போல தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் காட்டிக்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. மலைப்பகுதிக்கு சென்றவர்கள் அனுமதி வாங்கினார்களா, இல்லையா என்பது கூட தெரியாத அமைச்சரை வனத்துறை அமைச்சராக வைத்திருப்பது நல்லதல்ல. வனப்பகுதிக்கான கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்காத காரணத்தில்தான் நக்சலைட்கள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவவும், உருவாகவும் மலைப்பகுதிகள் ஏதுவாக இருக்கிறது.

 

 ஒரு தனியார் பேருந்து மற்றும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் கவனக்குறைவால் நடைப்பெறும் எந்தவொரு உயிரிழப்பிற்கும் அந்த துறை அமைச்சர் கூட பொறுப்பு ஏற்று பதவி விலகாமல், சாதாரண வனத்துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்தது மக்களை முட்டாளாக்கும் செயல். எனவே வனத்துறை அமைச்சர் உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக முன்வர வேண்டும். காட்டு தீயில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

குரங்குகளின் அட்டகாசம்; நடவடிக்கை எடுக்க வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை.!!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

The terrifying of monkeys; people demand forester for action

 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும், குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி கிராமம் வனப்பகுதிகளைச் சார்ந்துள்ளது. 

 

சமீப காலங்களில் இப்பகுதியில் குடியேறியுள்ள குரங்குகளின் கூட்டம், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சிரமத்தை ஏற்படுத்திவருகிறது. குடியிருப்புகளின் உள்ளே புகுந்துவிடும் குரங்குகள், அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களைத் தூக்கிச் சென்றுவிடுவதாகவும், கைக்குழந்தைகளைத் தொட்டிலில் வைத்துவிட்டு வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றும் கூறும் பெண்கள், கைக்குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல் அங்குள்ள கடைகளில் உள்ள சிறுதீணிப் பொட்டலங்களைத் தூக்கிச் செல்வதாகவும், கடைகளில் எந்தவிதப் பொருட்கள் இருந்தாலும் அவற்றை சேதப்படுத்திவிடுதாகவும் வணிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

 

வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்களையும் குரங்குகள் விட்டுவைப்பதில்லையாம். அங்குள்ள பகவதி அம்மன் ஆலயம், நாடக மேடை, பேருந்து நிறுத்தம், தொடக்கப்பள்ளி வளாகம், வங்கி வளாகம் என அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்ளும் நூற்றுக்கணக்கான குரங்குகளால், தங்களது வாழ்வாதாரம் அன்றாடம் பெரும் அச்சத்துடன் கடந்து செல்வதாக கூறுகின்றனர். குரங்குகளைப் பிடித்து வனப்பகுதிகளில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

Next Story

குரங்குக்காக ஓடி ஓடி உதவிய இளைஞர்கள்- பொதுமக்கள் பாராட்டு!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

பாண்டிச்சேரி டூ பெங்களூர் சாலையில் திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அடுத்த தண்டப்பட்டு அருகே நவம்பர் 13ந்தேதி விடியற்காலை அச்சாலையில் சென்ற வாகனம் ஒன்றில் குரங்கு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த விபத்தில் குரங்கு அடிப்பட்டு பலத்த காயங்களுடன் சாலை ஓரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பலரும் கண்டும் காணாமல் சென்றுள்ளனர்.

VELLORE HIGH MONKEY INCIDENT PEOPLS HELP

செங்கத்தை சேர்ந்த கமல்ஹாசன், காமராஜ், முருகன் அவ்வழியாக வரும் போது அதனை பார்த்துள்ளனர். உடனே தாங்கள் வந்த வண்டியை நிறுத்திவிட்டு, அந்த குரங்கை தூக்கி கொண்டு செங்கம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது குரங்கின் கால்களின் எலும்பு உடைந்துள்ளது என்பது மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு தெரிய வந்தது. 

இருப்பினும் செங்கம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வசதி இல்லாத காரணத்தால், திருவண்ணாமலைக்கு கொண்டு  மருத்துவர்கள் செல்லக்கூறியுள்ளனர். அதன்படி திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
 

மனிதன் ஒருவன் சாலையில் கீழே விழுந்து கிடந்தாலே முகத்தை திருப்பிக்கொண்டும், போதையில் விழுந்துக்கிடக்கறான் என பேசும், நடந்துக்கொள்ளும் சமூகத்தில் குரங்குக்காக நின்று உதவிய தகவலை கேள்விப்பட்டு பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.