Skip to main content

மதிக்காத தேர்தல் ஆணையம்! - வருத்தத்தில் நாம் தமிழர் கட்சி!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

Election Commission didn't place NTK's Vote parentage

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் வலிமையான பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போட்டியாக, மாற்று அரசியலை முன்னிறுத்தி சீமானின் 'நாம் தமிழர் கட்சி', கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்', டி.டி.வி.தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்றம்க் கழகம்' ஆகியவை களத்தில் நின்றன. 

 

‘மாற்றத்திற்கான எளியவர்களின் புரட்சி’ என்கிற பிரகடனத்துடன் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியைத் தனித்துப் போட்டியிட வைத்தார் சீமான். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07 சதவீத வாக்குகளைப் பெற்று 9-வது இடத்தைப் பிடித்த நாம் தமிழர் கட்சி, தற்போது நடந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

 

இதுகுறித்து தேர்தல் வியூக வல்லுநர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீத வாக்குகளையும், 2019-ல் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளையும், நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்றது. இந்த தேர்தலில் 6.85% ஓட்டுடன் மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க. கட்சிகளைப் புறந்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது சாதாரண விசயமல்ல. பிரதான கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் அக்கட்சிக்கு மூன்றாவது இடத்தை மக்கள் கொடுத்திருந்தாலும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க.வை நெருங்க முடியாதபடி 10-ல் 1 பங்குக்கும் குறைவான வாக்குகளுடன் இருப்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

 

நா.த.க நிர்வாகிகளோ, "எங்களைப் போல, பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஜெயித்திருப்போம். மாற்றத்தை விரும்புகிற நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் எங்களை ஆதரிக்கிறபோது எங்கள் கட்சிக்கான வாக்கு வங்கியும் வலிமையாக இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் அரசியலில் கட்சி ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது எங்களிடம் வலிமையாக இல்லாதது துரதிர்ஷ்டம்தான். இனி அடுத்த தேர்தலுக்குள் கட்சியின் வாக்கு வங்கியை வலிமையாக்கும் முயற்சிதான் சீமானின் அடுத்த வியூகம்'' என்கிறார்கள். 

 

"அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகால கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிற கட்சிகளுக்கு எதிராக எளியவர்களான நாங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. கடுமையாக உழைத்து தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டோம்; கம்பீரமாக நிற்கிறோம். இனி, வெற்றிக்கான மாற்று வியூகம் தான் எங்களின் இலக்கு'' என்கிறார் சீமான்.

 

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் சதவீதத்தை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்  6.85% வாங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பதிவிடாமல் பொதுவாக மற்றவையில் சேர்த்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.