Skip to main content

"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது" - தொல்.திருமாவளவன்!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

election campaign thol thirumavalavan mp at chidambaram

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வாக்குச் சேகரித்தார்.

 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது உள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப இடங்களில் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி மூக்கை நுழைத்து தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது. மேலும் அ.தி.மு.க., பா.ம.க. முதுகில் ஏறி சவாரி செய்து உள்ளே நுழையப் பார்க்கிறது. 

 

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றக் கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு ஆறு சீட்டு என்றாலும் பரவாயில்லை என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கூட்டணியில் முதல் கையெழுத்திட்டோம். மதவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவது பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமாக உள்ளது. பா.ஜ.க. அரசியல் கட்சி அல்ல, அந்த கட்சியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.தான், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைதான் பா.ஜ.க.வின் கொள்கை . ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமூக நீதிக்கு எதிரான இயக்கம்.

 

பா.ம.க., பா.ஜ.க. இரட்டைக் குழந்தைகள், பா.ம.க. சாதி வெறியைத் தூண்டுகிறது. பா.ஜ.க. மதவெறியைத் தூண்டுகிறது. எந்த காலத்திலும் நாங்கள் சீட்டுக்காக அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி பேரம் பேசியது இல்லை. எங்களது நிலைப்பாடு எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கும். கூட்டணிக்காகக் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டோம்.

 

அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் செய்துள்ளது. அ.தி.மு.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்ககளை பா.ஜ.க. விலைக்கு வாங்கி தி.மு.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உட்கார திட்டம் தீட்டியுள்ளது. இந்திய தேசிய விடுதலைக்குப் போராடாத ஒரு இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. இதனை பாரதிய ஜனதா கட்சி முழுங்கிவிடும். பா.ம.க.வை நீர்த்துப்போகச் செய்துவிடும். ஓபிசி இட ஒதுக்கீட்டை என்றுமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்தது இல்லை. ஆனால் ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்த பாரதிய ஜனதாவுடன், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

 

அனைத்துச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஒரு வார்டில் கூட வெற்றிபெற முடியாது. ஆனால், 20 தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய ஒரே காரணத்திற்காக தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த கோட்சே சுட்டுக் கொன்றான். சமூகநீதி என்று கூறும் பா.ம.க. இவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.

 

எம்.ஜி.ஆர்., இரட்டை இலை என்பது வேறு, ஜெயலலிதா இரட்டை இலை என்பது வேறு; எடப்பாடியின் இரட்டை இலை; பாரதிய ஜனதா கட்சியின் பின்புலத்துடன் உள்ள இரட்டை இலை ஆகும். இரட்டை இலை மற்றும் மாம்பழத்திற்கு வாக்களித்தால் அது பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக ஆகிவிடும். எனவே, சமூக நீதியைக் காக்க இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை வெற்றிபெறச் செய்யுங்கள்" இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார். 

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.