Skip to main content

"தி.மு.க ஆட்சி உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக இருக்கும்"- மு.க.ஸ்டாலின் பேச்சு!  

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

dmk mkstalin speech at cuddalore district election campaign

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டம், விருத்தாசலம்- பொன்னேரி பைபாஸ் சாலை அருகே கலைஞர் திடலில் அமைக்கப்பட்டிருந்தப் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் மனுக்களைப் பெற்று கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

அப்போது அவர் கூறியதாவது; "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர்தான், இந்த ஊர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் அவர். வாடிய முகங்களின் ஏக்கங்களை போக்குவதற்காகவும், உங்களுடைய கவலைகளைத் தீர்ப்பதற்காகவும் தான் நான் வந்திருக்கிறேன். தி.மு.க. ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. அப்போதெல்லாம் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை ஏற்படுத்தக் கூடியவை எவை எவை என்பதை எல்லாம் யோசித்து, அதை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். 

 

இன்று ஒரு ஆட்சி உள்ளது. மக்களின் துரோக ஆட்சி, மக்களைத் தண்டிக்கும் ஆட்சி, இந்த அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் தண்டிக்க வேண்டும். அதற்கான காலமும், சூழலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு உழைக்க கஷ்டம் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அவர் உழைப்பு என்று எதை சொல்கிறார். ஊர்ந்து போவதையா... ஊர்ந்து போன கதை எல்லாம் உங்களுக்கு தெரியும். அதைதான் உழைப்பு என்று கூறுகிறாரா? அப்படி ஒரு பழக்கம் எங்களுக்கு இல்லை. காலைப் பார்த்தால் ஊர்ந்து போய் பதவியைப் பிடிப்பதும், அதன் பின்பு காலை வாரிவிட்டு பதவி சுகத்தை அனுபவிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. 

 

கலைஞர் எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார்; போராடக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைச் செல்ல கற்றுக் கொடுத்தார், மக்கள் பாதிக்கப்படும் போது உதவிட கற்றுக் கொடுத்தார். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் மக்களில் ஒருவனாக இருக்க கற்றுக் கொடுத்தார். புயலா, மழையா, நிலச்சரிவா, வெள்ள பாதிப்பா, எங்கே மக்கள் துயர் துன்பத்தை அனுபவித்தாலும், இந்த ஸ்டாலின் முதல் ஆளாக அங்கு நிற்பேன். 

 

தூத்துக்குடியில் 13 பேரை துப்பாக்கிச் சூட்டில் பலியாக்கிய போதும், நீட் தேர்வு காரணமாக மாணவ மணிகள் தற்கொலை செய்துக் கொண்ட போதும் சென்றேன். அ.தி.மு.க பேனர் விழுந்ததில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று உதவிகள் செய்தேன். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினேன். நீட் தேர்வுக்கு எதிராக போராடி இருக்கிறேன். காவிரி உரிமை மீட்பு நடைபயணம் நடத்தினேன். இது அனைத்திற்கும் மேலாக கரோனாவின் போது மக்களோடு மக்களாக இருந்து உதவி செய்தவன் தான் இந்த ஸ்டாலின். எனக்கு உழைப்பைப் பற்றி பழனிசாமி கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் நான் இல்லை. கரோனா காலத்தில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறோம் என விளம்பரம் கொடுக்கிறீர்களே... தமிழ்நாட்டில் கரோனாவினால் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுதான் கோபுரமாக உயர்ந்து நிற்பதா? கரோனா காலத்தில் கொள்ளையடித்து கோபுரமாக நின்றது முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர்கள்தான், பொதுமக்கள் அல்ல. பொது மக்களின் வாழ்க்கை தரைமட்டத்திற்கு வந்துவிட்டது. சிறுதொழில் செய்பவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். பல பேருக்கு வேலை இல்லை. சிறுதொழில்கள் முடங்கிப் போய்விட்டது; தொழிலை தொடங்க முடியவில்லை.

 

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு மாதம் ஐயாயிரம் கொடுங்கள் என்று நான் சொன்னேன். காதில் கேட்காதது போல் முதலமைச்சர் இருந்தார், பணம் இல்லை என்று சொன்னார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கான்ட்ராக்ட்காரர்களுக்கு கொட்டிக் கொடுத்தார். கரோனா காலத்திலும் டெண்டர் முறையில் வேலை செய்தார்கள். மருந்தில் தொடங்கி பிளிச்சிங் பவுடர் வரை கொள்ளை. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பதிலும் ஊழல். இப்படி கரோனாவை விட கொடூர அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்தை முடித்தாக வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. அதன்பிறகு அமையப் போகிற தி.மு.க ஆட்சி உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக இருக்கும். கலைஞரின் மகனான இந்த ஸ்டாலின் சொன்னதை செய்வேன், செய்வதை தான் சொல்வேன். நாளைய தமிழகம் நல்ல தமிழகமாக அமையும்" என்றார். 

 

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ., கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.