Skip to main content

“அ.தி.மு.கவுக்கு மக்களிடம் வாக்குக் கேட்க என்ன உரிமை இருக்கிறது?” - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

DMK I Periyasami started election campaign at dindigul

 

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ சுற்றுப் பயணத்தை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கினார்.

 

அதற்கு முன்பு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பெரியசாமி, “கரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்காத அரசு அ.தி.மு.க அரசு. மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க என்ன உரிமை இருக்கிறது. ஏழை எளிய மக்கள் கரோனாவால் இறந்தார்கள். அதை எட்டிக்கூடப் பார்க்காத அ.தி.மு.க., மக்களிடம் வாக்குக் கேட்க என்ன உரிமை இருக்கிறது.  


வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியினர், மக்களிடத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. மக்களுக்கு நன்றாகவே தெரியும். மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சி எது என்று. ஆகவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும். மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பதவியேற்பார். 

 

கரோனா பரிசோதனை கருவிகள் வாங்குவதில் ஊழல் செய்து கொள்ளை அடித்த ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை போட்டது என அனைத்திலும் ஊழல், லஞ்சம். அரசுப் பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டியதில் ஊழல், இதற்கு எல்லாம் தி.மு.க ஆட்சி வந்தபின்பு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.


தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம். ஆளுங்கட்சியினர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். கூட்டத்தைக் கூட்டலாம். ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினர் நேற்று ரயிலை மறிக்கிறார்கள், பேருந்தை மறிக்கிறார்கள், ரயில் மீது கல்லெறிந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை” என்று கூறினார். 

 

cnc


இதில், மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தண்டபாணி நாகராஜன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.